சேலம் நடுவண் சிறையில் தமிழ்க்கணிமை, திறவூற்று மென்பொருள் பயிலரங்கம்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 25, 2015

பேராசிரியர் மா தமிழ்ப்பரியின் உரை


சேலம் நடுவண் சிறை அலுவலகப் பணியாளர்களுக்கான தமிழ்க்கணிமைப் பயிலரங்கம் மார்ச்சு 25, 2015 புதன்கிழமை அன்று சேலம் நடுவண் சிறையின் அலுவலகப் பணியாளர் திறன் மேம்பாட்டு நடுவத்தின் சார்பில் நிகழ்ந்தது.

இப்பயிலரங்கம் சேலம் நடுவண் சிறையிலுள்ள கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்குத் தொடங்கியது. இப்பயிலரங்கிற்கு சேலம் நடுவண் சிறையின் கூடுதல் கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் தலைமை வகித்தார். இப்பயிலரங்கின் வரவேற்புரையை சேலம் நடுவண் சிறையின் மனவியல் நிபுணர் உ. பாஸ்கரன், தமிழ்நாடு சிறைப்பணி வழங்கினார்,வாழ்த்துரையை சேலம் நடுவண் சிறையின் சிறை அலுவலர் முருகேச முத்துராமலிங்கம்வழங்கினார், தமிழ்க்கணிமைப் பயிலரங்கம் குறித்த நோக்கவுரையை பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல், மக்கள் தொடர்பியல் துறையின் பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதிவழங்கினார்.

இப்பயிலரங்கில் பயிற்சிகளை இரண்டு அமர்வுகளாகப் பிரித்து, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இதழியல், மக்கள் தொடர்பியல் துறையின் பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி நேரிடைப் பயிற்சியை நடத்தினார். முதல் அமர்வில் தமிழ்க்கணிமை குறித்த அறிமுகத்தை அவர் அளித்தார். இவ்வமர்வில் தமிழ் ஒருங்குகுறி உள்ளீடு, தமிழ்க்கணிமையின் தேவை, வலைதளங்களில் தமிழ் மின்னாட்சி, தமிழ் ஒருங்குகுறி மென்பொருட்கள், தமிழ் ஒருங்குகுறி எழுதிகள், தமிழ்99 விசைப்பலகை இயக்கம், தமிழ் உள்ளீட்டுப் பயிற்சிக்கான வலைதளங்கள் ஆகியன குறித்து பயிற்சி அளித்தார்.

தமிழ்க்கணிமைப் பயிலரங்கம்

மதிய நிகழ்வான இரண்டாம் அமர்வில் விக்கியூடகத் தொகுப்புப் பணிகள், விக்கியூடகத் திட்டங்கள், திறவூற்று மூலங்கள், திறவூற்று அகரமுதலிகள், கலைக்களஞ்சியங்கள், திறவூற்று வலைதளங்கள், திறவூற்று மென்பொருட்கள் குறித்த பயிற்சிகள் அளிக்கபெற்றது. இப்பயிலரங்கில் சேலம் நடுவண் சிறையின் அலுவலகப் பணியாளர்கள் 50 பேர் பங்கேற்றனர். இப்பயிலரங்கில் பயிலரங்கப் பங்கேற்பாளர்களுக்கு திறவூற்று மென்பொருட்கள் அளிக்கப்பெற்றது. இப்பயிலரங்கின் நன்றியுரையை சேலம் நடுவண் சிறையின் மனநல ஆலோசகர் செல்வகுமார் வழங்கினார்.