இந்தியாவின் அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மார்ச்சு 14, 2016


அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று, 700 கி.மீ. -1,250 கி.மீ.க்கு இடைப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கும் திறன்கொண்ட அக்னி-1 ஏவுகணை சோதனை, ஒடிஸா கடற்கரைப் பகுதியான பாலாசோரில் திங்கள்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

பாலாசோரில் உள்ள அப்துல் கலாம் தீவில் (முன்பு இது வீலர் தீவு ஆகும்) இப்பரிசோதனை தொடங்கியது. ஏவுகணை செலுத்திய 9 நிமிடங்கள் 26 வினாடிகளில் 700 கிமீ தூரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது. பாதுகாப்பு தொடர் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அக்னி-1 ஏவுகணை ஏற்கெனவே, பலமுறை வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட பின்னர், கடந்த 2004ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. 12,000 கிலோ எடையும், 15 மீட்டர் நீளமும் கொண்ட இந்த ஏவுகணை, 1,000 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று, எதிரிகளின் இலக்கை துல்லியமாகத் தாக்கவல்லது. இதற்கு முன்னர், கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி, பாலாசோரில் அக்னி ஏவுகணை சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.


மூலம்[தொகு]