மனுவேல் நொரியெகாவை பனாமாவுக்கு நாடு கடத்த பிரான்ஸ் முடிவு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஆகத்து 4, 2011

மனுவேல் நொரியேகா 1980களில் பனாமாவின் இராணுவ ஆட்சித் தலைவராக இருந்த காலத்தில் நடத்தியதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களில் விசாரணைகளை எதிர்கொள்ளுவதற்காக அவரை நாடு கடத்துவதற்கு பிரான்ஸ் முன்வந்துள்ளது.


மனுவேல் நொரியேகா

நொரியேகா ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக தற்போது பிரான்சில் சிறைத்தண்டனை அநுபவித்து வருகிறார். அதற்கு முன்னதாக இவர் அமெரிக்காவில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுக்காக 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.


அடுத்த மாதம் அளவில் நொரியேகா பனாமாவிற்கு அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் மீது ஏற்கனவே பனாமா நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. மூன்று மனித உரிமை மீறல்களில் அவர் அங்கு குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் சமூகமளிக்காத நிலையில் ஒவ்வொன்றுக்கும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தன.


நாடு கடத்துவதற்கு எதிராக அவர் அடுத்த ஒரு மாத காலத்துள் மேன்முறையீடு செய்ய வேண்டும். 77 வயதான மனுவேல் நொரியேகா தனது நாட்டுக்குத் திரும்புவதையே விரும்புகிறார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.


நொரியேகா பனாமாவின் அரசுத்தலைவராக 1983 இல் பதவியேற்கும் முன்னர் பல ஆண்டுகள் அந்நாட்டின் இரகசியத்துறைக்குத் தலைவராகப் பணியாற்றினார். அதன் பின்னர் தேசியப் படைக்குத் தலவராக 1982 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டார். 1960களின் பிற்பகுதியில் இவர் அமெரிக்காவின் இரகசியத் துறையான சிஐஏ இனால் பணிக்கு அமர்த்தப்பட்டார். 1987 வரை அவர் அமெரிக்க அரசினால் ஆதரவளிக்கப்பட்டு வந்தார். 1988 ஆம் ஆண்டில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் அவர் சம்பந்தப்பட்டு குற்றவாளியாகக் காணப்பட்டார். அதன் பின்னர் அவருக்கும் அமெரிக்க அரசுக்கும் இருந்த உறவு முறிந்தது.


அடுத்த ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களை அடுத்து நொரியேகா அங்கு “போர் நிலை”யை அறிவித்தார். பனாமாக் கால்வாயில் நிலை கொண்டிருந்த அமெரிக்கப் படைகளுக்கும் பனாமாப் படையினருக்கும் இடையில் முறுகல் நிலை வலுத்தது. அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் பனாமா நகரில் கொல்லப்பட்டதை சாட்டாக வைத்து டிசம்பர் நடுப்பகுதியில் அமெரிக்கா பனாமாவை முற்றுகையிட்டது.


இதையடுத்து வத்திக்கன் தூதரகத்தில் நொரியேகா தஞ்சமடைந்தார். அமெரிக்கப் படைகள் தூதரகத்தின் மீது பலத்த தாக்குதல்களைத் தொடுத்ததை அடுத்து 1990 ஆம் ஆண்டு சனவரி 3 ஆம் நாள் நொரியேகா அமெரிக்கப் படையினரிடம் சரணடைந்தார். இதையடுத்து அவர் மயாமிக்கு விசாரணைக்காகக் கொண்டு வரப்பட்டு 17 ஆண்டுகள் சிரைத்தண்டனை பெற்று பின்னர் பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டார்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]