இந்தியாவில் 'முதலாவது பெண்களுக்கான சிறப்பு நீதிமன்றம்' மேற்கு வங்காளத்தில் நிறுவப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 24, 2013

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரணை செய்வதற்கான சிறப்பு நீதிமன்றம் ஒன்று மேற்கு வங்க மாநிலத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இதுவே பெண்களுக்கான முதலாவது சிறப்பு நீதிமன்றமாக இருக்கும்.


இந்நீதிமன்றத்திற்கு இரண்டு பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், நீதிமன்றத்திற்கான அரசு வழக்கறிஞர்கள், மற்றும் பணியாளர்கள் அனைவரும் பெண்களாகவே இருப்பர். பெண்கள் தொடர்பான வழக்குகள் அனைத்தும் இங்கு மிகத் துரித கதியில் தீர்த்து வைக்கப்படும் என மூத்த நீதிபதி ஒருவர் தெரிவித்தார்.


அண்மையில் இந்தியத் தலைநகர் தில்லியில் பேருந்து ஒன்றில் இடம்பெற்ற குழு-வன்புணர்வு, மற்றும் படுகொலையை அடுத்து இந்தியாவில் இவ்வகையான வழக்குகளை துரித கதியில் விசாரணை செய்து தீர்ப்பளிக்க வேண்டும் என நாடெங்கும் கோரிக்கை எழுதுள்ள நிலையில் இந்த சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.


"ஆண்கள் அமர்ந்திருக்கும் நீதிமன்றத்தில் பெண்கள் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வெளிப்படையாகக் கூற வெட்கப்படுவார்கள். இவ்வகையான நீதிமன்றங்கள் பெண்கள் சுதந்திரமாக சாட்சியமளிக்க உதவும்," என மனித உரிமை ஆர்வலர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.


மூலம்[தொகு]