இஸ்ரோ வெற்றிகரமாக மூன்றாம் முறையாக இடஞ்சுட்டும் செயற்கை கோளை ஏவியது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், அக்டோபர் 16, 2014


இந்தியா முனைய துணைக்கோள் ஏவுகலம் சி26 மூலம் சிறீ ஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து அமெரிக்காவின் புவி நிலை காட்டிக்கு மாற்றாக இந்திய வட்டார இடஞ்சுட்டும் செயற்கை கோள் தொகுதி 1 சி ஐ செலுத்தியுள்ளது.


"இந்திய வட்டார இடச்சுட்டும் செயற்கை கோள் தொகுதி 1 சி" என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஏழு செயற்கோள்கள் வரிசையில் மூன்றாவதாகும். முதலாவது ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட இதை ஏற்றிய ஏவுகலம் அதிகாலை 01.32 மணிக்கு சென்ற செயற்கைகோளை 20 நிமிடம் கழித்து சுற்றுப்பாதையை நோக்கி செலுத்தியது. செயற்கைகோளின் எடை 1,425.5 கிலோகிராம் ஆகும்.


புவிக்கு அருகில் 288 கிமீ தொலைவிலும் தூரமாக 20,650 கிமீ தொலைவிலும் 17.86 டிகிரி சாய்வாகவும் செயற்கைகோளை நிலை நிறுத்த இந்திய விண்வெளி ஆய்வு மையம் முனைந்துள்ளது.


செயற்கோளின் வாழ்நாள் 10 ஆண்டுகளாகும். "முனைய துணைக்கோள் ஏவுகலம் சி26 " இச்செயற்கைகோளை அக்டோபர் 10 அன்று ஏவுவதாக இருந்தது, தொழில் நுட்ப சிக்கல் காரணமாக அன்று ஏவப்படவில்லை.


இச்செயற்கைகோள் ("இந்திய வட்டார இடச்சுட்டும் செயற்கை கோள் தொகுதி 1 சி" ) இறுதியில் பூமியிலிருந்து 36,000 கிமீ உயரத்தில் நிலைநிறுத்தப்படும். இதில் இரண்டு வகையான சேவைகள் உண்டு. ஒன்று எல்லோருக்கும் பொதுவான அனைவரும் பயன்படுத்தும் இயல்பான சேவை. மற்றொன்று தகவல்கள் மறைக்கப்பட்டு செல்லும் அதிகாரமளிக்கப்பட்டுள்ள பயனர்களுக்கான சேவை.


இந்திய வட்டார இடச்சுட்டும் செயற்கை கோள் தொகுதியானது ஏழு செயற்கோள்களை கொண்டிருக்கும் 1420 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகும் இது 2015ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இத்தொகுதியின் முதல் இரண்டு செயற்கைகோள்கள் கடந்த ஆண்டு யூலை, இவ்வாண்டு ஏப்ரல் மாதங்களில் செலுத்தப்பட்டன.



மூலம்[தொகு]