ஈரானிய அணுவியலாளரின் படுகொலைச் சந்தேக நபர் தூக்கிலிடப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மே 15, 2012

இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஈரானின் அணுவியலாளர் ஒருவரின் படுகொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நபர் தூக்கிலிடப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் அறிவித்துள்ளது.


2010 சனவரியில் பேராசிரியர் மசூத் அலி முகம்மதி என்பவர் தமது வீட்டுக்கருகில் வைத்து குண்டுத்தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாக 24 வயதுள்ள மஜித் ஜமாலி ஃபாஷி கைது செய்யப்பட்டார்.


இவர் இசுரேலின் மொசாட் என்ற புலனாய்வுப் பிரிவின் முகவராகவும் செயற்பட்டார் எனவும் ஈரானிய அரசு தெரிவித்துள்ளது. இவருக்கு இசுரேல் இக்கொலையைச் செய்வதற்காக 120,000 டாலர்களைக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளது. இசுரேல் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.


பேராசிரியர் அலி முகம்மதி தெகரான் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியராக இருந்தவர். இவர் ஈரானின் அறிவியல் வளர்ச்சியில் முக்கிய இடம் வகித்தவர்.


இக்கொலைக்குப் பின்னால் இசுரேலும் அமெரிக்காவும் உள்ளதாக ஈரான் ஜனாதிபதி அகமெதிநெசாத் குற்றம்சாட்டியிருந்தார். இது போன்ற தாக்குதலை இசுரேலின் மொசாட் அமைப்பே வெளிநாடுகளில் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.


மூலம்[தொகு]