ஈரானில் சுணி இசுலாமியத் தலைவர் தூக்கிலிடப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூன் 21, 2010

ஈரானின் தென்கிழக்கு மாநிலமான சிஸ்டென் பலுச்சித்தானத்தில் ரத்தக்களரி ஏற்படுத்திய கலவரத்தை நடத்தியவர் எனக் குற்றம் சாட்டப்பட்ட ஜுந்தலா என்ற சுணி இசுலாம் தீவிரவாதக் குழுவின் தலைவர் அப்துல்மாலிக் ரிகி என்பவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் தூக்கிலிடப்பட்டார் என இர்னா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


தெகரான் புரட்சி நடுவர் மன்றத்தின் முடிவுக்கு ஏற்ப அப்துல்மாலிக் ரிகி, ஈவின் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.


அப்துல் மாலிக் ரிகியின் கும்பல் ஆயுதக் கொள்ளை, படுகொலை முயற்சிகள், ராணுவத்தைத் திட்டமிட்டுத் தாக்கியது, காவல்துறை மீது தாக்குதல் நடத்தியது, சாதாரண மக்களைக் கொன்றுகுவித்தது ஆகிய வன்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக நீதிமன்ற அறிக்கை ஒன்று தெரிவித்தது. 154 இராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் இந்த அமைப்பினால் 2003 ஆம் ஆண்டில் கொல்லப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது. அப்துல் மாலிக் ரிகி கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் இருந்து கிர்கிஸ்தானுக்குத் தப்பி ஓட முயன்ற போது வழியில் அவரை ஈரான் கைது செய்தது.


2003 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட ஜுந்தலா என்ற இயக்கம் (கடவுளின் சிப்பாய்கள்) பலுச்சிச மக்களின் மனித உரிமை, பண்பாடு ஆகியவற்றைக் காக்கப் போராடும் அமைப்பாகக் கருதப்படுகிறது.

மூலம்[தொகு]