எகிப்தில் கிறித்தவர்களைக் கொலை செய்தவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சனவரி 16, 2011

எகிப்தில் ஆறு கொப்டிக் கிறித்தவர்களையும் ஒரு முஸ்லிம் காவல்துறை அதிகாரியையும் கொலை செய்தமைக்காக எகிப்தியர் ஒருவருக்கு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.


தெற்கு எகிப்தில் சென்ற ஆண்டு 2010 சனவரியில் கிறித்துமசு (பழமைவாத) இரவு நாள் ஆராதனை நடத்திய கிறித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக முகமது அகமட் உசைன் என்பவர் மீதான குற்றச்சாடு நிரூபிக்கப்பட்டது.


கிறித்தவ நபர் ஒருவரினால் 12 வயது முஸ்லிம் சிறுமி பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட நிகழ்வுக்குப் பழி வாங்கவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


கொப்டிக் கிறித்தவர்கள் மீதான இத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் மீதான தீர்ப்புகள் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.


எகிப்தின் 80 மில்லியன் மக்கள்தொகையில் கொப்ட்டிக் (பழமைவாத) கிறித்தவர்கள் 10 விழுக்காடு ஆகும். இம்மாதம் புத்தாண்டு நாள் அன்று அலெக்சாண்டிரியா நகரில் கொப்ட்டிக் தேவாலயம் ஒன்றில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 23 பேர் உயிரிழந்திருந்தனர். தம் மீது எப்போது பாகுபாடு காட்டப்படுவதாகவும், தம்மீது நடத்தப்படும் தாக்குதல்கள் எப்போதும் தண்டனைக்குட்படுத்தப்படுவதில்லை அல்லது மிகக் குறைந்த தண்டனைகளே வழங்கப்படுகின்றன என கொப்ட்டிக் கிறித்தவர்கள் அரசு மீது குறை கூறி வருகின்றனர்.


தொடர்புள்ள செய்தி[தொகு]

மூலம்[தொகு]