ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க நாட்டோ படை நாடுகள் உடன்பாடு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, செப்டெம்பர் 6, 2014

சிரியாவில் தொடங்கி இன்று இராக் வரை ஆக்கிரமித்து, பல அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் ஈராக் மற்றும் சிரியாவில் இசுலாமிய தேசம் (ஐ.எஸ்) எனும் தீவிரவாத அமைப்பை அழிக்க நாட்டோ படை நாடுகள் உடன்பாடு செய்துள்ளனர்.


ஐ.எஸ் என்ற அமைப்பு சிரியாவின் உள்நாட்டு போரில் வலுப்பெற்று, அங்குள்ள மற்ற கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஆஸாத் அரசை எதிர்த்து போரிட்டு பல இடங்களை கைப்பற்றியது. சிரியாவின் அருகில் அமைந்த நாடான ஈராக்கிலும் அவர்கள் தாக்குதல்கள் நடத்தி, அங்கு இருக்கும் ஷியா பிரிவு இசுலாமியர்களை கொன்று குவித்து வருகின்றனர். இது மட்டுமல்லாது கிறித்துவர்கள் மற்றும் யசிதி இன மக்களையும் துரத்துவது, கட்டாய மதமாற்றம் செய்வது அல்லது கழுதறுத்து கொல்வது போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். சமீபத்தில், இரண்டு மேற்கத்திய செய்தியாளர்களை கொன்ற காணொளியை வெளியிட்டனர்.


பிரித்தானியாவின் வேல்ஸ் நாட்டின் நியுபோர்ட் நகரில் வியாழன் மற்றும் வெள்ளிகிழமை கூடிய நாட்டோ அமைப்பு நாடுகள், இந்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை அழிக்க ஒப்புதல் அளித்துள்ளனர். தீவிரவாதிகளின் நிதிகளை ஒடுக்கி, அவர்களை ராணுவபலம் கொண்டு தாக்க அமெரிக்கா உட்பட நாட்டோ அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.


அக்கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, "முதலில் அவர்களது ஆயுத செல்வாக்கை வீழ்த்துவது மூலம் அந்த இயக்கத்தின் மனிதவளத்தை நம்மால் குறி வைத்து அழிக்க முடியும்" என்று கூறினார்.


அமெரிக்கா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், கனடா, ஐஸ்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, பிரித்தானியா உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு செயலாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.


இதே கூட்டத்தில் உருசியா-உக்ரைன் கலகம் மற்றும் ஆப்கானிஸ்தானில் அடுத்த கட்டத்தினை பற்றியும் நாட்டோ உறுப்பினர் நாடுகள் விவாதித்தனர்.

மூலம்[தொகு]