கால்பந்து 2010: காலிறுதிப் போட்டிகளில் அர்ஜென்டினா, பராகுவே அணிகள் தோல்வி

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூலை 4, 2010

தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்றுவரும் 2010 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் நேற்றிரவு இடம்பெற்ற காலிறுதிப் போட்டி ஒன்றில், ஜெர்மனி அணி அர்ஜென்டினா அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இதன் மூலம் அர்ஜெண்டினாவின் பயிற்சியாளர் டியேகோ மரடோனா உலகக்கோப்பை வெற்றிக் கனவு சிதறுண்டது.


ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்திலேயே ஜெர்மனியின் முல்லர் அபாரமான கோலடித்து ஜெர்மனியை முன்னணிக்கு இட்டுச் சென்றார். இருப்பினும் போட்டியின் ஆதிக்கத்தை சமநிலைப்படுத்த ஆர்ஜன்டீனா கடுமையாகப் போராடியது.


ஆனால் 2வது பாதி ஆட்டத்தை முழுவதுமாக தனது பக்கம் திருப்பி விட்டது ஜெர்மனி. போட்டியின் 67ஆவது நிமிடத்தில் க்ளோஸ் போட்ட கோலுடன் அர்ஜெண்டினா திணறியது. பின்னர் போட்டியின் 74ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ஃப்ரெய்ட்ரிச் மூன்றாவது கோலைப் போட்டார். இறுதியில் க்ளோஸ் மீண்டும் ஒரு கோலைப்போட ஜெர்மனி 4-0 கோல்கள் என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.


நேற்று நடந்த இன்னும் ஒரு காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பராகுவே அணியை வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.


ஜூலை 7 ஆம் நாள் இடம்பெறும் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி ஜெர்மனியை எதிர்த்து விளையாடும். ஜூலை 6 இல் இடம்பெறும் மற்றொரு அரையிறுதி ஆடட்த்தில் நெதர்லாந்து அணி உருகுவே அணியை எதிர்த்து விளையாடும்.

மூலம்[தொகு]