சச்சின் டெண்டுல்கர் 50வது சதம் அடித்து புதிய உலக சாதனை

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், திசம்பர் 20, 2010

இந்தியத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஐம்பது சதங்களை அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார். தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியன் நகரில் அந்நாட்டுக்கு எதிராக நடைபெற்று வரும் துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஒன்றிலேயே அவர் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.


சச்சின் டெண்டுல்கர்

தேர்வுத் துடுப்பாட்டத்தில் அதிகப்படியான சதங்களை அடித்தவர்களின் வரிசையில் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் ஆத்திரேலிய அணியின் தலைவர் ரிக்கி பொண்டிங் 39 சதங்களுடன் உள்ளார்.


செஞ்சூரியனில் நேற்று இடம்பெற்ற நான்காம் நாள் ஆட்டத்தில் 37 வயதான சச்சின் ஆட்டமிழக்காமல் 107 ஓட்டங்களைப் பெற்றார். "இது எனக்கு மற்றுமொரு எண், ஆனால் அது மிகவும் இதமாக உள்ளது," என டெண்டுல்கர் தெரிவித்தார். தனது இந்த 175வது தேர்வு ஆட்டத்தின் போது டெண்டுல்கர் தனது டெஸ்ட் துடுப்பாட்ட வரலாற்றில் 14,500 ஓட்டங்களை நேற்றுக் கடந்துள்ளார். டெண்டுல்க்கரின் சதத்தில் 12 நான்குகளும் ஒரு ஆறும் அடங்கும்.


1989 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டத்தை பாக்கித்தானுக்கு எதிராக விளையாட ஆரம்பித்த சச்சின் ஏற்கனவே தேர்வுத் துடுப்பாட்டத்தில் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற உலக சாதனையும் ஏற்படுத்தி விட்டார். தனது முதலாவது சதத்தை 1990 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கெதிரான ஆட்டத்தில் எடுத்தார்.


ஒவ்வொரு கிரிக்கெட் ஆடத்தையும் சச்சின் அடக்கத்துடனும் மரியாதையுடனும் ஏற்றுக் கொள்வார்.

—இந்தியப் பயிற்சியாளர் காரி கேர்ஸ்ட்டன்

இந்திய அணியின் பயிற்சியாளர் காரி கேர்ஸ்ட்டன் கருத்துத் தெரிவிக்கையில், “சச்சின் ஒரு துடுப்பாட்டப் பேராசிரியர்,” என்றார். "ஒவ்வொரு கிரிக்கெட் ஆடத்தையும் சச்சின் அடக்கத்துடனும் மரியாதையுடனும் ஏற்றுக் கொள்வார்.”


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]