சனாதிபதியைப் பதவி விலகக் கோரி ஏமனிலும் போராட்டம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 29, 2011

ஏமன் நாட்டில் அரசுத்தலைவரைப் பதவி விலகக் கோரி, எதிர்க்கட்சியினரும் இளைஞர் அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.


ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சலே கடந்த 32 ஆண்டு காலமாக ஆட்சியில் உள்ளார். இவரது பதவிக் காலம் 2013 இல் முடிவடைகிறது. அதற்குள் தன்னுடைய மகனை அரசுத்தலைவராக்க முயற்சி செய்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏமன் நாட்டின் மக்கள் தொகையில், பாதிப் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கின்றனர். வறுமை, ஊழல் மற்றும் வேலைவாய்ப்பின்மை என்பவற்றைக் காரணம் காட்டி வெகுண்டெழுந்த இளைஞர்களும், எதிர்க்கட்சியினரும் தற்போது அதிபர் அப்துல்லா சலேயைப் பதவி விலகக் கோரி தலைநகர் சனாவில் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சலே பதவி விலகுவதைத் தவிர வேறு எந்த சமாதானத்தையும் நாங்கள் ஏற்க தயாராக இல்லை என போராட்டக்காரர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.


இரு வாரங்களுக்கு முன்னர் துனீசியாவில் அதிபர் பென் அலியைப் பதவி விலகக் கோரி நடந்த போராட்டத்தின் காரணமாக அவர் தலைமறைவாகி சவுதி அரேபியாவில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளார். துனீசியாவில் மக்கள் கொந்தளிப்பை அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து எகிப்திலும் வேறு சில அரபு நாடுகளிலும் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளனர்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]