சமச்சீர்க் கல்வித் திட்டத்தை 10 நாட்களில் அமல்படுத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஆகத்து 9, 2011

சம‌ச்‌சீ‌ர்க் க‌ல்‌வித் திட்டம் தொடர்பான வழ‌க்‌கி‌ல் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் வழ‌ங்‌கிய ‌தீ‌‌ர்‌‌ப்‌பி‌ல் தலை‌யிட முடியாது எ‌ன்று கூ‌றியு‌ள்ள உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம், சம‌ச்‌சீ‌ர்க் க‌ல்‌வியை 10 நா‌ளி‌ல் அம‌ல்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு‌க்கு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.


இதனையடுத்து 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது. சமச்சீர் கல்வி தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், 25 காரணங்களை ஆராய்ந்து இந்த தீர்ப்பை வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்த வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட நாங்கள் விரும்பவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு சமச்சீர் கல்வியை, தமிழகத்தின் முன்னாள் திமுக அரசு கடந்த ஆண்டு அமல்படுத்தியது. இந்த கல்வியாண்டு முதல், மற்ற வகுப்புகளுக்கு அமல்படுத்தப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது. இவ்வாண்டு ஆட்சி மாறியதும், சமச்சீர்க் கல்வியை அமல்படுத்துவதை தள்ளிவைக்கும் வகையில், அதிமுக அரசு சட்டத் திருத்தத்தை, சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றியது.


இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து, பெற்றோர், மாணவர்கள் தரப்பில், சென்னை உயர்நீதி மன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சட்டத் திருத்தத்துக்கு உயர்நீதி மன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு, உச்சநீதிமன்றம் மேன்முறையீடு செய்தது. பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இவ்வழக்கின் மீது, இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதே நேரம் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக தமிழக அரசு காத்திருப்பதாகவும், தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை அரசு அமல்படுத்தும் என்றும் முதல்வர் ஜெயலலிதா சட்ட சபையில் நேற்றுத் தெரிவித்திருந்தார்.


மூலம்[தொகு]