சிட்னி இராணுவத் தளத்தைத் தாக்க முயற்சித்த மூவர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், திசம்பர் 27, 2010

சிட்னியில் உள்ள இராணுவத் தளம் ஒன்றைத் தாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூவர் குற்றவாளிகள் என மெல்பேர்ணில் உள்ள விக்டோரியா மாநில உச்ச நீதிமன்றம் கடந்த வியாழன் அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இவர்கள் மூவரும் ஆத்திரேலியாவிலும் மேற்குலகிலும் இசுலாம் மதம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக நம்பியதால் இத்தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.


விசாம் மகமுத் ஃபட்டால், நாயப் எல் சாயத், சானி எடாவ் அவெய்சு ஆகிய குற்றவாளிகள் மூவரும் சோமாலியா மற்றும் லெபனானியர்கள் ஆவர். இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கு எதிரான தண்டனை எப்பொழுது என்பதை நீதிமன்றம் கூறவில்லை. இவர்களுடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் போதிய சாட்சியம் இன்மையால் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் 2009 ஆம் ஆண்டு ஆகத்து 4 ஆம் நாள் மெல்பேர்ணில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்டனர்.


சிட்னியின் ஹோல்ஸ்வேர்தி என்ற புறநகரில் உள்ள இராணுவத்தளத்தின் மீது தானியங்கித் துப்பாக்கிகள் கொண்டு தற்கொலைத் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டம் தீட்டினர் என நடுவண் காவல்துறையினர் தெரிவித்தனர். மேற்குலகில் இசுலாம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதால் தாம் இறக்கும் வரை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்ள இவர்கள் திட்டமிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஈராக், மற்றும் ஆப்கானித்தானில் ஆத்திரேலியாவின் பங்கு குறித்து இவர்கள் சஞ்சலத்துக்குள்ளாகியிருந்தனர் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். இவர்களில் ஒருவர் இசுலாமிய மத குருமார்களின் உத்தரவான ‘ஃபாத்வா’வைப் பெறுவதற்காக சோமாலியா சென்றதாகவும் இவர்கள் சோமாலியாவின் அல்-சபாப் தீவிரவாதக் குழுவுடன் தொடர்பில் உள்ளவர்கள் எனவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]