சிரின் எபாடியின் நோபல் பரிசை கைப்பற்றவில்லை என்கிறது ஈரான்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, நவம்பர் 28, 2009


ஈரானின் மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான சிரின் எபாடிக்கு 2003 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட நோபல் அமைதிப் பரிசை தாம் கைப்பற்றவில்லை என்று ஈரானிய அதிகாரிகள் மறுத்திருக்கிறார்கள்.


சிரின் எபாடி

இந்த கைப்பற்றலைக் கண்டித்து, நோர்வேயில் இருக்கும் ஈரானிய தூதரை நோர்வே அரசு அழைத்து விசாரித்திருந்தது. இதைக் கண்டித்திருக்கும் ஈரானிய வெளியுறவு அமைச்சரகம், ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு நோர்வேக்கு உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளது.


தற்போது லண்டனில் இருக்கும் எபாடி, தமது வங்கிக் கணக்கும், தமது கணவரின் வங்கிக் கணக்கும் ஈரானிய அதிகாரிகளால் முடக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.


நோபல் பரிசாக தமக்கு அளிக்கப்பட்ட நிதிக்கு ஈரானிய சட்டங்களின் கீழ் வரி விதிக்க முடியாது என்று கூறியுள்ள எபாடி, ஆனால் தமது பரிசுப்பணத்திற்கு வரி கட்டும்படி ஈரானிய அதிகாரிகள் வலியுறுத்தி வருவதாக தெரிவித்திருக்கிறார்.


சிரின் எபாடி நோபல் பரிசு பெற்ற முதலாவது முஸ்லிம் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் மகுமூத் அகமதிநெச்சாத் ஜூன் மாதத்தில் சர்ச்சைக்குரிய முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளுக்கு முதல் நாள் லண்டனுக்கு மாநாடு ஒன்றிற்காகச் சென்ற எபாடி மீளத் திரும்பவில்லை. அவருக்கு ஈரானிய அதிகாரிகளினால் மிரட்டல் செய்திகள் வந்திருந்ததாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

மூலம்[தொகு]