சீனாவில் நிலநடுக்கம்: சிக்குவான் மாகாணத்தில் குறைந்தது 70 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஏப்பிரல் 20, 2013

சீனாவின் தென்மேற்கே சிக்குவான் மாகாணத்தில் இன்று இடம்பெற்ற ஆற்றல் வாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டனர், 400 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


6.6 அளவு நிலநடுக்கம் லிங்கியொங் நகரின் மேற்கே 50 கிமீ தூரத்தில் 12 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று காலை உள்ளூர் நேரம் 08:02 மணிக்கு இது பதியப்பட்டுள்ளது. 115 கிமீ தொலைவில் உள்ள மாகானத் தலைநகர் செங்டூவிலும் இந்நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.


தலைநகரில் மக்கள் தமது விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். கட்டடங்கள் பல இடிந்து வீழ்ந்தன. தொலைத்தொடர்புகள், மின்னிணைப்புகள் துண்டிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் அதிகமான படையினர் உதவிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.


நிலநடுக்கம் இடம்பெற்ற பகுதியில் உள்ள யான் நகரில் 1.5 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். மேலும் பலர் இறந்திருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் கூறுகிறது.


2008 மே மாதத்தில் சிக்குவான் மாகாணத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 90,000 பேர் கொல்லப்பட்டனர், 5 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர்.


மூலம்[தொகு]