சுவிட்சர்லாந்தில் சுற்றுலாப் பேருந்து விபத்து, 22 சிறுவர்கள் உட்பட 28 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 14, 2012

சுவிட்சர்லாந்து சுரங்கப் பாதை ஒன்றில் சென்றுகொண்டிருந்த பெல்ஜியத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 22 சிறுவர்கள் உட்பட 28 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 24 சிறுவர்கள் காயமடைந்தனர்.


இத்தாலிய எல்லைக்கருகில் வாலெய்ஸ் பிராந்தியத்தின் சியேரே நகரில் இந்த அனர்த்தம் நேற்றிரவு 09:00 மணியளவில் நிகழ்ந்துள்ளது. 52 பேரை ஏற்றிக்கொண்டு இன்று பிற்பகல் பெல்ஜியம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து சுரங்கப்பாதையின் சுவருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. பேருந்தின் இரண்டு சாரதிகளும் உயிரிழந்தனர். சிறுவர்கள் தமது பனிச்சறுக்கல் சுற்றுலாவை முடித்துக் கொண்டு பெல்ஜியத்தின் லொம்மெல், ஹெவர்லீ நகரை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். இறந்த சிறுவர்கள் அனைவரும் 12 வயதானவர்கள் ஆவர். இக்குழுவினர் மூன்று பேருந்துகளில் திரும்பிக்கொண்டிருந்தனர். ஏனைய இரண்டும் பாதுகாப்பாக பெல்ஜியம் திரும்பியது.


விபத்து நடந்த இடத்துக்கு உடனடியாக விரைந்த பெல்ஜியத்தின் பிரதமர் எலியோ டி ரூப்போ "இந்நாள் பெல்ஜியத்திற்கு ஒரு பேரிழப்பான நாள்," எனக் குறிப்பிட்டார். மீட்புப் பணியில் 200 இற்கும் மேற்பட்டோர் பங்குபற்றினர்.


மூலம்[தொகு]