சூடானில் கிறித்தவத்துக்கு மதம் மாறிய பெண்ணுக்கு மரணதண்டனை தீர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மே 15, 2014

சூடானியப் பெண்ணொருவர் இசுலாம் மதத்தில் இருந்து மதம் மாறி கிறித்தவர் ஒருவரைத் திருமணம் புரிந்த குற்றத்திற்காக அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கத் தீர்ப்பளித்தது.


"இசுலாம் மதத்துக்கு மீண்டும் வர நாம் மூன்று நாட்கள் தவணை கொடுத்தோம், ஆனாலும், நீ இசுலாமுக்கு வரவில்லை. இதனால் நாம் தூக்குத்தண்டனை தீர்ப்பளிக்கிறோம்," என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.


எட்டு மாதக் கர்ப்பிணியான அப்பெண்ணை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்குமாறு மனித உரிமை அமைப்புகளும், வெளிநாட்டு தூதரகங்களும் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளன. அப்பெண் குழநதை பெற்றுக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே தண்டனை நிறைவேற்றப்படும் என உள்நாட்டு ஊடகங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.


சூடானிய இசுலாமிய சட்டத்தின் படி, கிறித்தவர் ஒருவரைத் திருமணம் புரிவது சட்டவிரோதம் என்பதால் அப்பெண்ணுக்கு 100 கசையடிகளும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது. தெற்கு சூடானை சேர்ந்த ஒரு கிறித்தவரையே இவர் மணம் புரிந்தார்.


மீரியாம் யேஹியா இப்ராகிம் இசாக் என்ற இப்பெண் ஒரு பழமைவாதக் கிறித்தவராக வளர்க்கப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பகம் தெரிவித்துள்ளது. இவரது தாயார் ஒரு கிறித்தவர் என்றும், தந்தை ஒரு முஸ்லிம் எனவும் கூறப்படுகிறது. தந்தை சிறு வயதிலேயே குடும்பத்தை விட்டு விலகி விட்டார்.


மூலம்[தொகு]