சென்னையில் ஐநா அலுவலகத்தை முற்றுகையிட்ட வைகோ, பழ. நெடுமாறன் கைது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 13, 2013

ஈழத்தமிழர்களை காக்கத் தவறியதாக குற்றஞ்சாட்டி, சென்னையில் நேற்று ஐக்கிய நாடுகள் அவையின் அலுவலகத்தை முற்றுகையிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேரும் கைது செய்யப்பட்டனர். நேற்று மாலை மெரினா கடற்கரையில் நடந்த ‘தியாகி முருகதாசன் நினைவு நாள்’ நிகழ்ச்சியில் வைகோவும் பழ.நெடுமாறனும் பங்குகொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


கடந்த திங்கட்கிழமையன்று, தான் வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையில் இப்போராட்டங்கள் குறித்து வைகோ விளக்கியிருந்தார். அந்த அறிக்கையில் "ஜெனீவாவில், ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க மார்ச் 4 ஆம் தேதி அன்று மாபெரும் மக்கள் கூடல் நிகழ்வு நடைபெற இருக்கிறது. அதில் இலட்சக்கணக்கான தமிழர்கள் திரள இருக்கிறார்கள். அதே நாளில், தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் இலங்கை அரசை எதிர்த்து கருப்புக்கொடி ஏந்தி அறப்போர் நடத்தவும், அதே நாளில் தலைநகர் சென்னையில் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் அறப்போரை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது" என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மூலம்[தொகு]