செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் அமெரிக்காவின் முயற்சி 2035 இற்குள் சாத்தியம்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 19, 2010


2030களின் நடுப்பகுதிக்குள் செவ்வாய்க் கோளை சுற்றிவர மனிதனை அனுப்புவோம் என்று அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா அறிவித்தார்.


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா
செவ்வாய்க் கோள்

புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் சென்ற வியாழக்கிழமை நடந்த விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கலந்து கொண்டு உரையாற்றினார்.


”அடுத்த 5 ஆண்டுகளில் நாசாவின் விண்வெளி திட்டங்களுக்கு 6 பில்லியன் டாலர்கள் அதிகமாக வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சூரிய மண்டலத்தை தானியங்கி மூலம் ஆய்வு செய்ய இருக்கிறோம். சூரியனுக்கு அருகாமையில் உள்ள பகுதிகளிலும் ஆய்வு நடத்தப்படும்,” என்றார் அவர்.


2025 ஆம் ஆண்டளவில் முதற்தடவையாக சந்திரனுக்கு அப்பால் மனிதன் சென்று ஆய்வுகள் நடத்த புதிய விண்கலத்தை வடிவமைக்கத் திட்டங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.


”2035 ஆம் ஆண்டு வாக்கில் செவ்வாய்க்கோளுக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவோம். அவர்களை ஏற்றி செல்லும் விண்கலம் செவ்வாய்க்கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் செவ்வாயை சுற்றி வந்து மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு வருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த கட்டத்தில் செவ்வாயில் மனிதன் இறங்குவார்கள்” என ஒபாமா அறிவித்தார்.


தமது புதிய திட்டம் பெருமளவில் வரவேற்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

மூலம்[தொகு]