ஜமைக்கா தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்பிரவரி 26, 2016

வியாழக்கிழமை நடைபெற்ற ஜமைக்கா தேர்தலில் ஆளும் மக்கள் தேசிய கட்சியை தோற்கடித்து ஜமைக்கா தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது.


இத்தேர்தலில் ஆண்ட்ரூ கோல்னசு தலைமையிலான ஜமைக்கா தொழிலாளர் கட்சி 33 இடங்களையும் பிரதம அமைச்சர் போர்டியா சிம்சன் மில்லரின் மக்கள் தேசிய கட்சி 30 இடங்களையும் பெற்றன.


இத்தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் வாக்காளர்கள் மத்தியில் சிறப்பு கவனம் பெற்று இருந்தது. நாட்டின் பொருளாதாரம் சீராவதற்கு பணவுதவி செய்த அனைத்துலக நாணய நிதியம் பல சிக்கன நடவடிக்கைகளை வலியுறுத்தியிருந்தது. அதை ஜமைக்கா அரசு கடைபிடித்ததால் மக்கள் துயருற்றனர்.


2011ஆம் ஆண்டு போதை பொருள் கடத்தல் மன்னன் கிறிசுடோபர் டியூட் கோக் ஐக்கிய அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டதை அடுத்து நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து அப்போதைய பிரதமர் பதவி விலகியதையடுத்து ஆண்ரூ கோல்னசு சிறிது காலம் பிரதம அமைச்சராக பதவி வகித்துள்ளார்.


ஜமைக்கா தொழிலாளர் கட்சி ஆதரவாளர்கள் தங்கள் கட்சி சின்னமான மணியை பலமாக ஆட்டியபோது உரையாற்றிய ஆண்ரூ கோல்னசு ஜமைக்காவை ஏழ்மையிலிருந்து மீட்பதே தங்கள் அரசின் கொள்கை என்று கூறினார்.


ஆண்ரூ கோல்னசு பிரதம அமைச்சராக பதவி ஏற்பார் என்று தெரிகிறது.


மூலம்[தொகு]