டாக்காவில் கட்டடங்கள் இடிந்து வீழ்ந்ததில் 23 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூன் 3, 2010

வங்காள தேசத்தின் தலைநகர் டாக்காவில் நான்கு மாடிக் கட்டடம் உடைந்து வீழ்ந்ததில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்தனர்.


செவ்வாய்க்கிழமை இரவு மக்கள் குடியிருப்பு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதன் அருகில் குடிசைகளில் குடியிருந்த மக்கள் சிலரே இறந்துள்ளனர். தொழிலாளர்கள். கூலியாட்கள் வாழும் பகுதியிலிருந்த கட்டடங்களே இவையாகும். ஆழ்ந்த தூக்கத்திலிருந்தால் எவராலும் தப்பியோட முடியவில்லை.


தீயணைப்புப் படையினர் ஸ்தலத்துக்கு விரைந்ததுடன் கனரக இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. மின்சாரக் கம்பிகள், எரிவாயுக்களின் கசிவுகளாலும் மீட்பு வேலைகள் இடைஞ்சலுக்குள்ளாகியுள்ளன. புதன்கிழமை காலை 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். காயமடைந்தோர் வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.


மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் எனவும், இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகடிக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


கால்வாயாக முன்னர் இருந்த ஒரு இடத்தின் மீதே இக்கட்டடம் கட்டப்பட்டதாகவும், இதன் உரிமையாளர் அதற்கும் மேலாக மேலதிக மாடி ஒன்றைக் கட்டினார் எனவும், இதனாலேயே கட்டடம் இடிந்து வீழ்ந்துள்ளதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


டாக்காவில் 2005 ஆம் ஆண்டில் சட்டவிரோதமாகக் அமைக்கப்பட்ட ஆடைத்தொழிற்சாலை ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 60 பேர் வரையில் உயிரிழந்தனர்.

மூலம்[தொகு]