தமிழ்நாட்டில் இரு தொடருந்துகள் மோதியதில் 10 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், செப்டெம்பர் 14, 2011

தமிழ்நாட்டில் இரண்டு தொடருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் கொல்லப்பட்டு 70 இற்கும் அதிகமானோர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


அரக்கோணத்தில் இருந்து காட்பாடி சென்று கொண்டிருந்த பயணிகள் வண்டி, சித்தேரி அருகே நிறுத்தப்பட்டிருந்த போது பின்புறமாக சென்னையில் இருந்து வேலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த புறநகர் மின்சார தொடருந்து வண்டி மோதியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எட்டுப் பெட்டிகள் தடம் புரண்டன, இவற்றில் மூன்று முற்றாக சேதமடைந்துள்ளன.


விபத்து நடந்த பகுதியில் பலத்த மழை பெய்வதால், மீட்புப்பணி சற்று நேரம் பாதிக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தார்கள். விபத்துக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை.


கடந்த மாதம் மேற்கு வங்கத்தில் இரு தொடருந்துகள் மோதியதில் மூவர் கொல்லப்பட்டு 200 பேர் வரையில் காயமடைந்தனர். சூலை மாதத்தில், உத்தரப் பிரதேசத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 69 பேர் கொல்லப்பட்டனர்.


நேற்றைய விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், மனிதத் தவறாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார்.


மூலம்[தொகு]