துருக்கி விமானத் தாக்குதலில் 35 குர்திய இனத்தவர்கள் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, திசம்பர் 31, 2011

கடந்த புதன்கிழமை அன்று துருக்கியில் ஈராக் எல்லையில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 குர்திய இனத்தவர்கள் கொல்லப்பட்டமைக்கு அந்நாட்டுப் பிரதமர் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.


இளம் சட்டவிரோதக் குடியேறிகள் 35 பேர் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். குர்தியப் போராளிகள் மீதே தாம் தாக்குதல் நடத்தியதாக துருக்கியின் இராணுவத்தலைவர் முன்னதாகத் தெரிவித்திருந்தார். இத்தாக்குதல் குறித்த அதிகாரபூர்வ விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.


புதன்கிழமைத் தாக்குதலை அடுத்து பல்லாயிரக்கணக்கானோர் துருக்கியில் கூடி ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தினர். அவர்கள் அரசுக்கெதிராகக் கோஷங்களை எழுப்பினர். குர்திய சிறுபான்மையினர் துருக்கியில் பாரபட்சமாக நடத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.


துருக்கியில் பிடிபி எனப்படும் குர்தியர்களின் செல்வாக்கு மிக்க கட்சி இத்தாக்குதலை மனித நேயத்துக்கு எதிரானதாக வர்ணித்ததுடன், ஐக்கிய நாடுகள் இதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. தாக்குதலில் இறந்தவர்கள் அனைவரும் 16 இற்கும் 20 இற்கும் இடைப்பட்ட வயதினர் எனக் கூறப்படுகிறது.


1984 ஆம் ஆண்டில் இருந்து பிகேகே எனப்படும் குர்திய தொழிலாளர் கட்சி குர்திய இனத்தவர்களின் விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகிறது. இதுவரை 40,000 இற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.


மூலம்[தொகு]