பேஸ்புக், டுவிட்டர் பயன்படுத்த இந்திய இராணுவத்தினருக்குத் தடை

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சனவரி 27, 2012

இந்தியாவில் இராணுவத்தினருக்கு முகநூல், டுவிட்டர், ஆர்குட் போன்ற சமூக வலை தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


பேஸ்புக், டுவிட்டர், கூகுள், ஆர்குட் ஆகிய சமூக வலை தளங்களில் பதிவேற்றப்படும் கருத்துக்களை உரிய தணிக்கைக்கு உட்படுத்தி வெளியிட உத்தரவிடக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதில் அளிக்க சமூக வலை தளங்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. முறைப்படி பதில் அளிக்காவிட்டால் அவற்றுக்குத் தடை விதிப்போம் எனவும் உயர்நீதிமன்றம் எச்சரித்திருந்தது.


இதைத் தொடர்ந்து கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் பதில் மனுத் தாக்கல் செய்தன. கருத்துக்களை தணிக்கை செய்வது கடினம் என மனுவில் கூறியிருந்தன. வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.


சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட ஏற்கனவே ராணுவத்தினருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ராணுவத்தில் 36 ஆயிரம் அதிகாரிகளும், 11.3 லட்சம் வீரர்களும் உள்ளனர். இவர்களில் யார், யார் பேஸ்புக் கணக்கு வைத்திருக்கிறார்கள், என்னென்ன தகவல்களை பதிவு செய்கிறார்கள் என்பதை கண்காணிப்பது சிரமம் என்பதால் தற்போது ஒட்டுமொத்தமாக சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்த இராணுவத்தினருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் சம்பந்தப்பட்ட தகவல்களை அவர்களது குடும்பத்தினரும் வெளியிடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறும் ராணுவத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]