மலேசியா மண்சரிவில் அனாதை இல்லச் சிறுவர்கள் பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மே 21, 2011

மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள அனாதை இல்லம் ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது 15 பேர் உயிருடன் புதையுண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இன்று சனிக்கிழமை உள்ளூர் நேரம் பிற்பகல் 1430 மணிக்கு இந்த அனர்த்தம் நிகழ்ந்தது. ஒன்பது பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த இரு நாட்களாக இப்பகுதியில் பெரும் மழை பெய்து வந்ததாகக் கூறப்படுகிறது. நூற்றுக்கும் அதிகமானோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


கோலாலம்பூரின் தெற்கேயுள்ள ஹூலு லங்காட் என்ற மாவட்டத்தில் உள்ள இதாயா மத்ரசா அல்-தக்வா அனாதை இல்லமே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டது. சிறுவர்கள் அங்குள்ள முகாம் ஒன்றில் பாரம்பரிய மலாய் இசைக்கருவிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த போதே மண்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மிக விரைவாக இரண்டு மண்சரிவுகள் ஏற்பட்டதென்றும், மிகச் சிலரே தப்பியோடக்கூடியதாக இருந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர். மீட்புப்பணிகள் நடைபெற்றபோது அங்கு மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


மூலம்[தொகு]