விக்கிலீக்ஸ் யூலியன் அசான்ச் லண்டனில் கைது செய்யப்பட்டார்
- 17 பெப்ரவரி 2025: விக்கிலீக்ஸ் ரகசியங்களை வெளியிட்டது குற்றமில்லை, டேனியல் எல்ஸ்பெர்க்
- 17 பெப்ரவரி 2025: விக்கிலீக்சிற்கு இரகசியங்களைக் கசிய விட்ட பிராட்லி மானிங்கிற்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை
- 17 பெப்ரவரி 2025: விக்கிலீக்ஸ்: புலிகள் சரணடைவதை இலங்கை நிராகரித்தது
- 17 பெப்ரவரி 2025: விக்கிலீக்ஸ்: ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் கருணாநிதியின் உண்ணாவிரத 'நாடகம்'
- 17 பெப்ரவரி 2025: விக்கிலீக்ஸ் நிறுவனர் அசான்ச்சிற்கு எக்குவடோர் அரசு புகலிடம் அளித்தது

செவ்வாய், திசம்பர் 7, 2010
அமெரிக்க அரசின் பல்லாயிரக்கணக்கான இரகசிய ஆவணங்களைக் கசியவிட்ட விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனர் யூலியன் அசான்ச் இன்று லண்டனில் கைது செய்யப்பட்டார்.

ஐரோப்பிய கைதாணை ஒன்றை அடுத்து இன்று காலை 0930 ஜிஎம்டி மணிக்கு லண்டனில் வைத்து அசான்ச் கைதானார் என ஸ்கொட்லாந்து யார்ட் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். அசான்ச் தானே முன்வந்து சரணடைந்தார் என்றும் இன்று வெஸ்ட்மின்ஸ்ட்டர் நீதவான் முன்னிலையில் அவர் நிறுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
யூலியன் அசான்ச் மீது பன்னாட்டுப் பிடியாணை ஒன்றை சுவீடனின் குற்றவியல் காவல்துறையினர் சென்ற வாரம் பிறப்பித்திருந்தனர். பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் தொந்தரவு போன்ற குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளுக்காக அசென்ச் தேடப்படுபவராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் இக்குற்றச்சாட்டுக்களை அசான்ச் மறுத்திருக்கிறார்.
சுவீடனால் பிறப்பிக்கப்பட்ட கைதாணை சட்டப்படி சரியானதென நீதவான் அறிவிப்பாரானால், அசான்ச் சுவீடனுக்கும் நாடு கடத்தப்படுவார். ஆனாலும் இதற்கான விசாரணைகள் முடிய சில மாதங்கள் பிடிக்கும் எனக் கருதப்படுகிறது.
அசான்சின் வழக்கறிஞர் மார்க் ஸ்டீவன்ஸ் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், யூலிய அசான்ச் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றி மேலும் அறிய விரும்புகிறார் என்றும், தனது பெயருக்கு ஏற்பட்ட இழுக்குகளைக் களைய விரும்புகிறார் எனத் தெரிவித்தார்.
மூலம்
[தொகு]- Wikileaks founder Julian Assange arrested in London, பிபிசி, டிசம்பர் 7, 2010
- WikiLeaks' Assange arrested in UK, அல்ஜசீரா, டிசம்பர் 7, 2010