ஹொங்கொங்கில் இரண்டு படகுகள் மோதியதில் 37 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், அக்டோபர் 2, 2012

ஹொங்கொங் கரைக்கப்பால் இரண்டு பயணிகள் படகுகள் நேற்று திங்கள் இரவு நேருக்கு நேர் மோதியதில் ஐந்து சிறுவர்கள் உட்படக் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக படகுகளின் பணியாளர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.


விபத்துக்குள்ளான படகுகளில் ஒன்று வாண வேடிக்கையைப் பார்ப்பதற்காக சென்ற சுமார் 120 பேரை ஏற்றிச் சென்றது. லம்மா தீவுக்கருகில் இது வேறொரு படகுடன் மோதி அரைப்பகுதி மூழ்கிய நிலையில் உள்ளது. பல பயணிகள் மோதலை அடுத்து கடலிற்குள் வீசப்பட்டனர். மோதிய சில நிமிட நேரத்தில் படகு மூழ்கியது.


ஹொங்கொங் பவர் கம்பனி மூழ்கிய படகின் உரிமையாளர்கள் ஆவர். இந்நிறுவனத்தின் ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தினருமே விக்டோரியா துறைமுகத்தில் வாண வேடிக்கையைப் பார்ப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


உயிர்தப்பியவர்களைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது.


சீனாவின் தேசிய தினம் நேற்று அக்டோபர் 1 இல் கொண்டாடப்பட்ட நிலையில், ஹொங்கொங்கின் கடல்வழியில் வழமையை விட போக்குவரத்து அதிகமாகக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. லம்மா தீவு ஹொங்கொங் தீவின் தென்கிழக்கே 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.


மூலம்[தொகு]