500 ஆண்டுகள் பழமையான திரு காளகஸ்தி சிவன் கோயில் இராசகோபுரம் இடிந்து வீழ்ந்தது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மே 28, 2010

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோவில் இராசகோபுரம் புதன்கிழமை இரவு இடிந்து விழுந்து தரை மட்டமானது. உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்படுகிறது.


ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோயில் இராசகோபுரம்

இந்தக் கோவில் கோபுரம் இடிந்து விழப் பல காரணங்கள் சொல்லப்பட்ட போதிலும் கோவில் கோபுரங்களில் வளர்ந்த ஆலமரச் செடிகளாலேயே விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்ததாக அப்பகுதி பக்தர்கள் கூறுகின்றனர்.


ஸ்ரீகாளஹஸ்தி ஞானபிரசுனாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் சிவன் கோவிலின் இராசகோபுரம் 122 அடி உயரம் கொண்டது.


இந்தக் கோயில் 1516 ஆம் ஆண்டு விஜய நகரப் பேரரசின் கிருஷ்ணதேவராய மன்னரால் கட்டப்பட்டது. திருப்பதியில் இருந்து 38 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூதத் தலங்களில் இக்கோவில் வாயுத் தலமாக விளங்குகிறது. கேது தோஷ நிவர்த்திக்கான பரிகார பூசைகள் செய்யப்படுவதால் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். தென் கைலாசம் என்றும் இந்தக் கோயில் அழைக்கப்பட்டு வந்தது.


இதன் இராசகோபுரத்தில் கடந்த 1988 ஆம் ஆண்டு விரிசல் ஏற்பட்டது. இதனால் கோபுர சிற்பங்கள் உடைந்து விழுந்தன. சேதமடைந்த இராஜகோபுரம் ரூ.15 இலட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது.


இந்நிலையில் இப்போது மீண்டும் இராஜகோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு அது விரிவடைந்து கொண்டே போய் கடந்த சில நாட்களில் இரண்டாக பிளந்து விட்டது.


இந்தப் பிளவை அடுத்து, கோபுரத்தைச் சுற்றி 500 அடி பகுதி ஆபத்து பகுதியாக அறிவிக்கப்பட்டு கடைகள் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் கோபுரத்தை சுற்றி கம்பி வேலியும் அமைக்கப்பட்டது. இது குறித்து சென்னைப் பேராசிரியர் நரசிம்ம ராவ் கூறுகையில், "ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயில் இராஜகோபுரத்தின் அடித்தளம் பலமாக உள்ளது. ஆனால், கோபுர கற்கள் பலவீனமாக உள்ளன. காற்று, மழை போன்ற இயற்கை பருவநிலை காரணமாக இராஜகோபுரம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையிலுள்ளது" என எச்சரித்திருந்தார்.


இந்நிலையிலேயே நேற்று முன்தினம் இரவு 08:05 மணியளவில் இராசகோபுரம் முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளது.


இச்செய்தி அறிந்ததும் ஆந்திர மாநில முதல்வர் கே. ரோசையா "உடனடியாக அதே இடத்தில் புதிய இராசகோபுரம் கட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு" அதிகாரிகளைப் பணித்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சித்தூர் மாவட்ட ஆட்சியருக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மூலம்[தொகு]