செச்சினியப் பிரிவினைவாதத் தலைவர் போலந்தில் கைதானார்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, செப்டெம்பர் 17, 2010

இரண்டு நாள் செச்சினியக் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ளவென போலந்து சென்றிருந்த செச்சினியப் பிரிவினைவாதத் தலைவர் அகமது சக்காயெவ் அங்கு வைத்துக் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.


இண்டர்போல் ஊடாக கைதாணையை ரஷ்யா பிறப்பித்துள்ளதால் சக்காயெவ் தமது நாட்டுக்குள் வந்தால் அவர் கைது செய்யப்படலாம் என ஏற்கனெவே போலந்தின் அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.


போலந்தின் தலைநகர் வார்சாவில் வைத்து இவர் கைது செய்யப்படதாக போலந்தின் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. ரஷ்யாவின் கைதாணை குறித்து தாம் ஆராய்ந்து வருவதாகவும், அதற்குப் பின்பே இவரை நாடு கடத்துவதா அல்லது விடுவிப்பதா என்பது முடிவு செய்யப்படும் என அரசுப் பேச்சாளர் மொனிக்கா லெவண்டோவ்ஸ்கா தெரிவித்தார்.


ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் தீவிரவாத நடவடிக்கைகளுக்காகத் தேடப்பட்டுவரும் சக்காயெவ், 2005 இல் ரஷ்யப்படையுடனான சண்டையில் கொல்லப்பட்ட செச்சினியத் தலைவர் அஸ்லான் மஸ்காதொவ் என்பவரின் பேச்சாளராக இருந்தவர்.


இவர் பின்னர் ஐக்கிய இராச்சியத்தில் நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்தார். 2003 இல் இவருக்கு அரசியல் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது.

மூலம்[தொகு]