அம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ச துறைமுகத்தில் தடையாகவிருந்த கற்பாறை அகற்றப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், திசம்பர் 6, 2011

இலங்கையில் அம்பாந்தோட்டையில் புதிதாக அமைக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச துறைமுகத்திற்குள் கப்பல்கள் நுழையத் தடையாகவிருந்த பாரிய கற்பாறை தற்போது அகற்றப்பட்டுள்ளதாக அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பிரதம பொறியியலாளர் அகில் ஹேவாகீகன தெரிவித்துள்ளார்.


இத்துறைமுகத்திற்கு முதலாவது கப்பல் 2010 நவம்பர் 17 வருகை தந்தது. பன்னாட்டுத் துறைமுகக் கப்பல் பாதைக்கு ஆறு கிலோ மீற்றர் தூரத்தில் அம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை ‘கரசன்லேவாய'களப்பின் ஒரு பகுதியைச் சூழ அணைகள் அமைத்து அதனை ஆழமாக்கி 21 மீற்றர் உயரத்தினை கொண்ட இரண்டு இறங்குதுறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. முதல் நிர்மாணப்பணிகளுக்காக சீன எக்சிம் வங்கி 85 சதவீத நிதியை இலங்கைக்கு வழங்கியது. மிகுதி 15 சதவீத நிதியை இலங்கைத் துறைமுக அதிகார சபை வழங்கியிருந்தது. மொத்தம் 360 மில்லியன் அமெரிக்க டொலர் முதலாவது கட்டப் பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது.


2010 நவம்பர் 17 இல் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச அதனைத் திறந்து வைத்ததன் பின்னர் சர்வதேசத்தில் இருந்து கப்பல்கள் எதுவும் வரவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன. இதன் பின்னர் பாரிய கற்பாறை இருப்பதன் காரணமாகவே பெரிய கப்பல்கள் வருவதற்கு தடை ஏற்பட்டுள்ளதாக ஏற்றுக் கொண்ட அரசாங்கம் கற்களை அகற்ற சீன நிறுவனத்திடம் நிதி பெற்று தற்போது கற்பாறை முற்றாக அகற்றப்பட்டுள்ளதென அறிவித்துள்ளது.


மூலம்[தொகு]