வெள்ளை மாளிகையில் அழையா விருந்தினர்களாக கலந்துகொண்ட தம்பதியினர் குறித்து சர்ச்சை

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 27, 2009


அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்கும் முகமாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அரச விருந்துபசாரத்தில் பல பாதுகாப்புத் தடுப்புக்களையும் மீறி, அழையா விருந்தாளிகளாக கலந்துகொண்ட தம்பதியினர் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


வடக்கு வேர்ஜீனியாவைச் சேர்ந்த தாரிக், மிசெல் சலாகி என்ற தம்பதியினர் செவ்வாயன்று இடம்பெற்ற விருந்துபசாரத்தில் இரவு 7:15 மணியளவில் உள் நுழைந்தனர். இவர்கள் தொலைக்காட்சி நடிகர்கள் போன்று தோற்றமளித்திருந்த நிலையிலேயே வெள்ளை மாளிகைக்குள் நுழைந்துள்ளனர். மற்றும் இவர்கள் எந்த இருக்கைகளிலும் எப்போதும் அமரவில்லை என அங்கு கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.


இச்சம்பவம் குறித்து முழு அளவிலான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டுமென வெள்ளை மாளிகையால் அமெரிக்க இரகசியப்பொலிஸ் திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் துணை ஜனாதிபதி ஜோ பைடன், வாஷிங்டன் மேயர் பென்ரி, வெள்ளைமாளிகை சிரேஷ்ட அதிகாரி உள்ளிட்டவர்களுடன் விருந்தில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இவர்களது ஃபேஸ்புக்கில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

மூலம்[தொகு]