இலங்கை உச்சநீதிமன்றம் சரத் பொன்சேகாவுக்கு விடுதலை மறுப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 24, 2010


இராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான உத்தரவை வழங்க இலங்கை உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.


பொன்சேகா தற்போது கடற்படை தலைமை அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சரத் பொன்சேகாவின் மனைவி சமர்ப்பித்த மனுவை நீதிமன்றம் நேற்று நிராகரித்து தீர்ப்பு வழங்கியது.


அரசாங்கம் அவரை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்த முடிவு செய்துள்ளது. ஆனாத்ல், ததம் ஒரு இளைப்பாறிய இராணுவத்தினர் என்ற வகையில் பொது நீதிமன்றம் ஒன்றிலேயே விசாரிக்கப்பட வேண்டும் என சரத் பொன்சேகா வாதாடி வருகிறார்.


குடும்ப உறுப்பினர்களும் சட்டத்தரணிகளும் பொன்சேகாவை பார்வையிடுவதற்கும், தான் விரும்பிய ஒரு வைத்தியரை பொன்சேகாவுக்கு சிகிச்சை வழங்குவதற்கும் உடனடியான அனுமதியை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேலும் விசாரணைகள் ஏப்ரல் 26 ஆம் நாள் இடம்பெறும் என தேதி குறிக்கப்படுள்ளது.


அரசுக்கு எதிராக சதி முயற்சிகளில் ஈடுபட்டதாக பொண்சேகா மீது அரசு குற்றம் சுமத்தியுள்ளது. ஆனாலும் குற்றப்பத்திரிகக எதுவும் இதுவரையில் தாக்கல் செய்யப்படவில்லை.


ஏப்ரல் மாதத்தில் இடம்பெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பொன்சேகா போட்டியிடத் தீர்மானித்துள்ளார். எனினும் அவர் சிறையில் இருந்தவாறே போட்டியிட வேண்டிவரும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த அரசுத் தலைவர் தேர்தலில் பொன்சேகாவை ஆதரித்த பிரதான எதிர்க்கட்சிகள் மூன்றும் இம்முறை தனித்தனியே போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்