சூடானுக்கும் தெற்கு சூடானுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, பெப்பிரவரி 11, 2012

சூடானுக்கும் தெற்கு சூடானுக்கும் இடையில் ஒருவரை ஒருவர் வலிந்து தாக்குவதில்லை என உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைதி பேச்சுக்களில் ஈடுபட்ட தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் தாபோ உம்பெக்கி கூறினார். இரு தரப்பும் மற்றவரின் இறையாண்மையையும், ஆள்புலக் கட்டுறுதியையும் மதிப்பதாக உறுதியளித்துள்ளனர்.


கடந்த ஆண்டு சூலை மாதத்தில் தெற்கு சூடான் சூடானிடம் இருந்து விடுதலை அடைந்த பின்னர் இரண்டு நாடுகளுக்கும் இடையே சர்ச்சைக்குரிய எல்லைகள் தொடர்பாக முறுகல் நிலை நிலவி வந்துள்ளது. அத்துடன் வருமானத்தைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான சர்ச்சையில் எண்ணெய் அகழ்வையும் நிறுத்தி வைத்திருந்தது. சூடான் 815 மில்லியன் டாலர்கள் பெறுமதியான எண்ணெயை தம்மிடம் இருந்து அபகரித்துக் கொண்டுள்ளதாக தெற்கு சூடான் குற்றம் சாட்டியிருந்தது.


எத்தியோப்பியத் தலைநகர் அடிஸ் அபாபாவில் இரு நாடுகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. முதல் நாள் பேச்சுக்களின் முடிவில் இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்துவதற்கு உடன்பட்டன. எண்ணெய்ப் பிரச்சினை தொடர்பாக பேச்சுகள் இன்றும் தொடர்கின்றன.


மூலம்[தொகு]