கொழும்பில் லங்காஈநியூஸ் இணையத்தள அலுவலகம் தீவைத்து எரிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சனவரி 31, 2011

இலங்கை அரசை விமர்சிக்கும் லங்காஈநியூஸ் என்ற இணையத்தளத்தின் அலுவலகம் இன்று திங்கட்கிழமை இனந்தெரியாதோரினால் எரியூட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


லங்காஈநியூஸ் தளத்தின் கொழும்புபேஜ் என்ற இணையப்பத்திரிகையின் தகவல் படி, கொழும்பின் புறநகர்ப்பகுதியான மாலபேயில் தகம் மாவத்தையில் உள்ள அவர்களது அலுவலகத்தினுள் இன்று அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாத சிலர் புகுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இப்போது கட்டடத்தினுள் உள்ள அனைத்துப் பொருட்களும் தீக்கிரையாகி விட்டன," என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2010 அரசுத்தலைவர் தேர்தலில் தாங்கள் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரித்து எழுதத் தொடங்கியதை அடுத்து தாம் பல அச்சுறுத்தல்களுக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளானதாக லங்காஈநியூஸ் சிங்கள மொழி இணையத்தளம் எழுதியுள்ளது. கடந்த ஆண்டு அரசுத்தலைவர் தேர்தலுக்குப் பின்னர் இவ்விணையத்தளத்தின் செய்தியாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போயுள்ளார். இவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.


இவ்விணையத்தளம் வெளியிட்டுவரும் சர்ச்சைக்குரிய கட்டுரைகளால் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களே இன்றைய சம்பவத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும் என இணையத்தள ஆசிரியர் பெனட் ரூபசிங்க அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளரிடம் தெரிவித்தார்.


இக்குற்றச்சாட்டுக்களை அரசு மறுத்துள்ளது. “எவ்வித ஆதாரமும் இல்லாமல் எம்மைக் குற்றம் சாட்ட முடியாது," என ஊடகப் பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல கூறினார்.


அரசுத்தலைவர் ராசபக்ச இச்சம்பவம் குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக த இந்து செய்திப்பத்திரிகை தெரிவித்துள்ளது.


2006 ஆம் ஆண்டு முதல் குறைந்தது 15 ஊடகவியலாளர்கள் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளதாக பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.


மூலம்[தொகு]