2008 மும்பை தாக்குதல் குற்றவாளி கசாப்புக்குத் தூக்குத்தண்டனை தீர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மே 7, 2010

2008 நவம்பரில் மும்பையில் நடைபெற்ற தாக்குதலில் ஈடுபட்டவர்களில் தப்பியிருக்கும் ஒரேயொரு தீவிரவாதி முகமது அஜ்மல் கசாப்புக்கு தூக்கு தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


மும்பை ரயில் நிலையம், நட்சத்திர ஒட்டல்கள், யூத வழிபாட்டு மையம் மற்றும் ஒரு மருத்துவமனையில் பாகிஸ்தானில் இருந்து படகு மூலம் மும்பை வந்த 10 பயங்கரவாதிகள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல்களில் 174 பேர் உயிரிழந்து பலர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களில் 22 அகவையுடைய கசாப் மட்டும் காயங்களுடன் உயிருடன் பிடிக்கப்பட்டார். ஏனையோர் அனைவரும் படையினருடன் நடந்த மோதல்களில் கொல்லப்பட்டனர்.


”கசாப் இந்தியாவை தாக்க வேண்டும் என்று நோக்கில் இருந்ததால் அவர் மீது தயவு தாட்சண்யம் காட்ட முடியாது,” என நீதிபதி தகல்யானி தனது தீர்ப்பில் கூறினார்.


கசாபை ஒரு கொல்லும் இயந்திரம் என்றும் கொடுரத்தின் அவதாரம் என்று அரச தரப்பு வழக்கறிஞர்கள் வர்ணித்துள்ளனர். நீதிமன்றத்திற்கு வெளியே இருந்த கூட்டமும் இந்துஸ்தானுக்கு ஜெய் என்று கோஷமிட்டு தனது மகிழ்சியை வெளிப்படுத்தியுள்ளது.


கசப்புக்குக் கருணை காட்ட வேண்டும் என அவரின் வழக்கறிஞர்கள் வாதாடினர். கசாப் தீவிரவாதக் குழுவினால் மூளைச் சலவை செய்யப்பட்டவர் என்றும், அவரைத் திருத்த முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.


இந்தியாவில் தூக்கு தண்டனைகள் மிக அரிதாகவே நிறைவேற்றப்படுகின்றன. 1995 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே ஒரு நபர் தான் தூக்கிலிடப்பட்டுள்ளார். இந்தத் தீர்ப்புக்கு எதிராக கசாப் மேல் முறையீடுகள் செய்ய முடியும். ஜனாதிபதியிடமும் அவர் கருணை மனு செய்ய முடியும். எனவே தண்டனை நிறைவேற்றப்பட பல ஆண்டுகள் பிடிக்கலாம் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]