இரத்தத்தில் நச்சுத்தன்மை பரவியதால் நைஜீரியாவில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூன் 7, 2010


நைஜீரியாவில் கடந்த வாரங்களில் இரத்தத்தில் ஈயம் கலந்ததனால் ஏற்பட்ட நச்சுத்தன்மையால் நூற்றுக்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


உள்ளூர் பொதுமக்கள் ஈயம் அதிகமாக உள்ள பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம் அகழ்வெடுப்பதால் இந்த உயிரிழப்புகள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அதிகரித்திருக்கிறது.


நாட்டின் வடக்கு மாநிலமான சம்ஃப்ராவைச் சேர்ந்தவர்களே ஈய நச்சுத்தன்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.


நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்ட 355 பேரில் 163 பேர் இறந்துள்ளதாக நைஜீரிய சுகாதாரத்துறை அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


நாட்டில் வருடாந்த தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்தச் சென்ற அதிகாரிகளே இந்த இறப்புகள் பற்றிக் கண்டறிந்துள்ளனர். வடக்கு மாநிலத்தின் பல வெளிப்புறக் கிராமங்களில் சிறுவர்களை அரிதாகவே காண முடிந்ததாக அவர்கள் தெரிவித்ததாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


மலேரியா நோயால் சிறுவர்கள் இறந்ததாக கிராமத்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற பன்னாட்டு அரச சார்பற்ற மருத்துவ நிறுவனத்தின் பணியாளர்கள் உள்ளூர் மக்களின் இரத்தத்தை சோதனை செய்த போது அவற்றில் பெருமளவு ஈயம் கலக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.


சம்ஃபாரா மாநிலம் அண்மையில் சீனக் கம்பனி ஒன்றை தங்கம் அகழ்வெடுக்க பணிக்கு அமர்த்தியிருந்தது. ஆனாலும் உள்ள்ர்ர்ப் பொதுமக்கள் சட்டவிரோதமாக அங்கு தங்கத்தை அகழ்வெடுத்து வந்துள்ளனர்.


அகழ்வு நடவடிக்கைகளின் போது வெளியான ஈயங்கள் உள்ளூர் நீர் வழங்கல் முறைமைகளுடன் கலந்ததைத் தொடர்ந்தே கிராமத்தவர்கள் பாதிப்படைந்துள்ளதாகக் கருதப்படுவதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மூலம்[தொகு]