பப்புவா நியூ கினியின் புதிய பிரதமராக பீட்டர் ஓ’நீல் தெரிவு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஆகத்து 3, 2011

பசிபிக் நாடான பப்புவா நியூ கினியின் புதிய பிரதமராக பீட்டர் ஓ’நீல் நேற்றுத் தெரிவு செய்யப்பட்டார். இதன் மூலம் அந்நாட்டுக்கு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் சில வாரங்களாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.


புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தலில் ஓ’நீலுக்கு ஆதரவாக 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக 24 பேர் வாக்களித்தனர். இதையடுத்து அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


பப்புவா நியூ கினி 1975-ல் ஆத்திரேலியாவிடம் இருந்து விடுதலை பெற்றதை அடுத்து சேர் மைக்கேல் சோமாரே அந்நாட்டின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் சில மாதங்களுக்கு முன்பு இதய நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து பிரதமர் பொறுப்பைத் தற்காலிகமாக அவரது நம்பிக்கைக்குரியவரான சாம் அபாலிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். ஆனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தார் அவர் அரசியலில் இருந்தே ஓய்வு பெற்றுவிட்டதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து பிரதமர் பதவி காலியாகவுள்ளதென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.


புதிய பிரதமராக தெரிவாகியுள்ள பீட்டர் ஓ’நீல் முன்னால் பிரதமர் சர் மைக்கேல் சோமாரேயின் அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் . நீண்டகால அரசியல் அனுபவிக்க இவரின் தலைமையில் நாடு புதிய பாதையில் பயணிக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


திரு பீட்டர் ஓ’நீலின் தெரிவை எதிர்த்து தாம் நீதிமன்றம் செல்லவிருப்பதாக இடைக்காலப் பிரதமர் சாம் அபால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


பப்புவா நியூ கினி இயற்கை எரிவாயு, தங்கம் ஆகிய இயற்கை வளங்களைக் கொண்டது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]