மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: போராளிகளின் தலைவர் சரணடைவது குறித்துப் பேச்சுவார்த்தை

விக்கிசெய்தி இலிருந்து
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இருந்து ஏனைய செய்திகள்
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அமைவிடம்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

வியாழன், நவம்பர் 21, 2013

உகாண்டாவில் உள்ள போராளிக் குழுத் தலைவர் யோசப் கோனி சரணடைவது குறித்துப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு அரசு அறிவித்துள்ளது.


சரணடைவதற்கு முன்னடர் தமக்குப் பாதுகாப்பு வேண்டும் என கோனி எதிர்பார்ப்பதாக அரசு கூறுகிறது.


எல்.ஆர்.ஏ எனப்படும் பிரபுக்களின் எதிர்ப்பு இராணுவத்தின் (Lord's Resistance Army) தலைவர் யோசப் கோனி போர்க்குற்றங்கள் தொடர்பாக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்பட்டு வருகிறார். இவரைப் பற்றிய தகவல் தருவோருக்கு 5 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக அமெரிக்கா முன்னர் அறிவித்திருந்தது.


கோனி தலைமையிலான கிளர்ச்சி 20 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கு உகாண்டாவில் ஆரம்பமானது. இவர்கள் சிறுவர்களைக் கடத்திச் சென்று பாலியல் தொழிலிலும், அடிமைகளாகவும், கிளர்ச்சிகளிலும் ஈடுபடுத்தி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


2005 ஆம் ஆண்டில் எல்.ஆர்.ஏ. போராளிகள் உகாண்டாவில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அன்றில் இருந்து இவர்கள் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, தெற்கு சூடான், கொங்கோ சனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளில் இயங்கி வந்தனர்.


மூலம்[தொகு]