பெர்லின் சுவரின் 50வது ஆண்டு நினைவு நாள் செருமனியில் கொண்டாடப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஆகத்து 14, 2011

பெர்லின் சுவர் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த நாள் நேற்று செருமனியில் உணர்வுபூர்வமாகக் கொண்டாடப்பட்டது. கம்யூனிசக் கிழக்கு செர்மனியை மேற்குடன் 28 ஆண்டுகளாகப் பிரித்து வந்த இச்சுவர் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் நாள் முற்றாகத் தகர்க்கப்பட்டது.


1986 ஆம் ஆண்டில் பெர்லின் சுவர்

பெர்லினில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பெர்லின் நகர முதல்வர் கிளாவுஸ் வொவரீட்: "(பெர்லின்) சுவர் ஒரு வரலாறு, அதனை நாம் மறந்து விடக்கூடாது," என்றார். பெர்லின் சுவரைத் தாண்ட முற்பட்டு உயிர் நீத்தவர்களுக்காக நண்பகல் 12:00 மணிக்கு நகரில் ஒரு நிமிட நேர மௌனம் அனுட்டிக்கப்பட்டது.


செர்மனியின் அரசுத்தலைவர் அங்கிலா மெர்க்கலும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டார். இவர் கிழக்கு செருமனியில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


பெர்லின் சுவரைத் தாண்டியவர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக 136 எனக் கூறப்பட்டாலும், உண்மையில் 700 பேர் வரையில் உயிரிழந்ததாக மனித உரிமைக் குழுக்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறாக முதலாவதாக கெண்டர் லிட்ஃபின் என்பவர் 1961 ஆம் ஆண்டு ஆகத்து 24 ஆம் நாள் இறந்தார். கடைசியாக கிறிஸ் கெஃப்ரோய் என்பவர் 1989 பெப்ரவரி 6 இல் இறந்தார்.


பெர்லினின் கிழக்குப் பகுதியில் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றிய பிரிஜிட்டா ஐன்றிக் என்பவர் ரியா-நோவஸ்தி செய்தியாளரிடம் கூறுகையில், "எனது மாணவர்களில் ஒருவர் ஆரம்ப காலங்களில் ஏணி ஒன்றின் உதவியுடன் சுவரைத் தாண்டித் தப்பித்துச் சென்றார். இதனை அடுத்து அம்மாணவனின் பெற்றோர் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தாயார் தனது வேலையில் இருந்து நீக்கப்பட்டார்," எனக் கூறினார்.


இப்போது கிழக்கு செருமனியிலேயே வாழ்ந்து வரும் இவர், பெர்லினுக்கு மேற்கேயுள்ள மேற்கு செருமனியில் உள்ளோர் இப்போதும் தம்மை வேறு இனத்தவர் போலவே பார்க்கின்றனர் என்றும், கண்ணுக்குத் தெரியாத ஒரு வேலி இப்போதும் உள்ளது எனத் தெரிவித்தார்.


மூலம்[தொகு]