சோமாலியத் தலைநகரில் இருந்து அல்-சபாப் போராளிகள் வெளியேறினர்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 8, 2011

சோமாலியாவின் அல்-சபாப் இசுலாமியப் போராளிகள் தாம் தலைநகர் மொகதிசுவில் இருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்துள்ளனர். சோமாலிய அரசும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.


கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவோடிரவாக அவர்கள் வெளியேறியதை அடுத்து, சோமாலிய அரசுத்தலைவர் சேக் சரீப் அகமது "போராளிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளதாகத்" தெரிவித்துள்ளார்.


ஆனாலும், இந்நடவடிக்கை ஒரு ஒரு இராணுவத் தந்திரோபாய நடவடிக்கை என்று அல்-சபாப் போராளிகளின் பேச்சாளர் கூறினார்.


மோதல்கள் இடம்பெறும் நிலையில் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்புவது பாதிக்கப்பட்டுள்ளது. போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு உதவி நிறுவனங்கள் செல்லுவதற்குப் போராளிகள் தடை விதித்துள்ளனர். தலைநகரில் இருந்து போராளிகள் வெளியேறியுள்ளதால், தலைநகர்ப் பகுதிகளில் நிவாரணங்கள் வழங்க முடியும் என தொண்டு அமைப்புகள் தெரிவித்துள்ளன.


அரசுப் படைகளும் ஆப்பிரிக்க ஒன்றிய அமைதிப் படையினரும் மொகதிசுவின் சில பகுதிகளையே தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பெரும்பாலான பகுதிகள் போராளிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. வெள்ளி இரவு கடும் மோதல் இடம்பெற்றதை அடுத்தே போராளிகள் வெளியேறியதாகத் தெரிய வருகிறது.


மூலம்[தொகு]