தாய்லாந்து 4,000 மொங் இன அகதிகளை லாவோசிற்குத் திருப்பி அனுப்ப ஆரம்பித்தது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், திசம்பர் 28, 2009


கிட்டத்தட்ட 4,000 மொங் இன அகதிகளை சர்வதேச நாடுகளின் வேண்டுகோள்களையும் பொருட்படுத்தாது தாய்லாந்து தனது நாட்டில் இருந்து லாவோசிற்கு திருப்பி அனுப்ப ஆரம்பித்தது.


வடக்கு பெட்சாபுன் மாகாணத்தில் இருந்த மொங் மக்கள் அகதி முகாமைத் தாம் மூஉடி விட்டதாக தாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.


இவர்கள் அனைவரும் பொருளாதார அகதிகள் என அவர்களை தாய்லாந்து வர்ணித்திருக்கிறது. வியட்நாம் போரின் போது தாம் அமெரிக்கப் படைகளுக்கு ஆதரவு தந்தமையால் லாவோசில் தாம் துன்புறுத்தல்களுக்கு ஆளாவோம் என மொங் மக்கள் தெரிவிக்கின்றனர்.


தாய்லாந்து இந்நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா, மற்றும் ஐக்கிய நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன.


"அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கை இன்று அதிகாலை 0530 மணிக்கு ஆரம்பித்தது" என தாய்லாந்தின் இராணுவ அதிகாரி தனா சாருவட் தெரிவித்தார். இந்நடவடிக்கையில் கிட்டத்தட்ட 5,000 இராணுவத்தினர் பங்கு பற்றினர். "ஒரே நாளில் அனைவரும் வெளியேற்றப்பட்டு விடுவார்கள்" என அவர் தெரிவித்தார்.


அகதிகள் எவரும் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என தாய் பிரதமர் அபிசித் வெச்சாசிவா தெரிவித்தார்.


ஊடகவியலாளர்களோ அல்லது வேறு எவரோ முகாம்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.


1975 இல் கம்யூனிச பத்தெட் லாவோ குழு லாவோசைன் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து பல்லாயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர். இவர்களில் பெரும்பான்மையானோர் மேலை நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரெஞ்சு கினி, கனடா போன்ற நாடுகளில் குடியமர்த்தப்பட்டார்கள். மீதமிருந்தோரில் பலர் ஐநாவின் உதவித்திட்டத்துடன் லாவோசிற்குத் திரும்பினார்கள். கிட்டத்தட்ட 8,000 மொங் மக்கள் இன்னமும் அகதிகளாக தாய்லாந்தில் தங்கியிருக்கிறார்கள்.

மூலம்[தொகு]