அலைக்கற்றை ஊழல்: கனிமொழிக்கு பிணை வழங்கப்படுவது குறித்த தீர்ப்பு ஒத்திவைப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மே 15, 2011

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2ஜி) ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரருமான கனிமொழியின் பிணை மனு மீதான விசாரணையில், அவருக்கு பிணை வழங்கலாமா என்பது குறித்த தீர்ப்பு மே 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இன்று சனிக்கிழமை காலை, கனிமொழியும், கலைஞர் தொலைக்காட்சி மேலாண்மை இயக்குநர் சரத்குமாரும் நடுவண் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு நீதிமன்றத்தில் சமூகமளித்தபோது, தீர்ப்பை 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி ஓ.பி. சைனி அறிவித்தார்.


கனிமொழி, சரத்குமார் உட்பட ஐந்து பேர், அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான இரண்டாவது குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். பிரதான குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவுடன் சேர்ந்து சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ராசா மூலம் கிடைத்த லஞ்சப்பணம் 200 கோடி ரூபாயை டி.பி. ரியாலிடி நிறுவனம் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு அவர் பெற்றதாகவும் குற்ற்ம் சாட்டப்பட்டுள்ளது.


அதே நேரத்தில், கனிமொழி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, கனிமொழிக்கு இதில் நேரடித் தொடர்பு இல்லை என்றும், அவரை காவலில் வைக்கக் கூடாது என்றும் வாதிட்டார்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]