சிரியா தொடர்பான ஐநா தீர்மானத்திற்கு எதிராக உருசியா, சீனா வீட்டோ

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, பெப்பிரவரி 5, 2012

சிரியாவில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை கொண்டு வந்த தீர்மானத்தை சீனாவும் உருசியாவும் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்தியுள்ளன.


வீட்டோ பயன்படுத்தியது வெட்கப்படக்கூடிய செயல் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிரியாவுக்கு எதிரான தீர்மானம் சமநிலைப்படுத்தப்பட்டதல்ல என சீனாவும் உருசியாவும் தெரிவித்துள்ளன.


சிரியாவின் ஹோம்சு நகரில் 55 பேர் கொல்லப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்த சிறிது நேரத்தில் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.


இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆத்திரேலியத் தலைநகர் கான்பராவில் உள்ள சிரியத் தூதரகம் தாக்குதலுக்குள்ளானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 40 பேரடங்கிய குழுவொன்று தூதரகத்தின் நுழைவாயிலை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று தளவாடங்களை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த கணினிகளையும் தம்முடன் எடுத்துச் சென்றுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.


கடந்த ஓராண்டுக்கும் மேலாக அசாத்தின் அரசுக்கு எதிராக இடம்பெற்று ஆர்ப்பாட்டங்கலில் கிட்டத்தட்ட 5,400 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் கூறுகிறது.


மூலம்[தொகு]