கென்ய உலங்கு வானூர்தி விபத்தில் உட்துறைப் பாதுகாப்பு அமைச்சர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூன் 10, 2012

கென்யாவில் உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த கென்ய உட்துறைப் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் சைட்டோட்டி கொல்லப்பட்டார் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அமைச்சரும் (அகவை 66) அவரது உதவி அமைச்சரும் பயணம் செய்த உலங்கு வானூர்தி இன்று ஞாயிற்றுக்கிழமை தலைநகர் நைரோபியின் மேற்கே கீழே வீழ்ந்து தீப்பற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர்கள், மற்றும் அவர்களது பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஆறு பேருடைய எரிந்த உடல்கள் மீட்கப்பட்டதாக ஏஎஃப்பி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


முன்னாள் உதவி அரசுத்தலைவரான சைட்டோட்டி சோமாலியாவின் அல்-சபாப் என்ற போராளிக் குழுவை வெகுவாக விமரிசித்து வந்தவர். எதிர்வரும் அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடவிருந்தார். தற்போதைய அரசுத்தலைவர் கிபாக்கியின் பதவிக்காலம் 2013 சனவரியுடன் நிறைவடைகின்றது. பிரதமர் ரைலா ஒடிங்கா தானும் இத்தேர்தலில் போட்டியிடவிருப்பதாக அறிவித்திருந்தார். டிசம்பர் 2007 இல் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலை அடுத்து அங்கு இடம்பெற்ற வன்முறைகளில் குறைந்தது 1,500 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம்[தொகு]