உலகின் மிக விலை உயர்ந்த புத்தகம் மீண்டும் விற்பனைக்கு வருகிறது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்டம்பர் 13, 2010

உலகின் மிகவும் விலை உயர்ந்த புத்தகமாக மதிப்படப்பட்டிருக்கும் ஜோன் ஜேம்ஸ் ஓடபோன் என்பவர் எழுதிய அமெரிக்காவின் பறவைகள் (Birds of America) என்ற புத்தகம் அமெரிக்காவில் உள்ள சோதிபைசு என்ற ஏலக்கடையில் விற்பனைக்கு விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஓடபோனின் நூலில் வரையப்பட்டுள்ள கனடா பெண் வாத்து

19ம் நூற்றாண்டைச் சேர்ந்த இப்புத்தகத்தின் 19 முழுமையான பிரதிகளே தற்போது எஞ்சியுள்ளதாகக் கூறப்படுகிறது. இவற்றில் 108 புத்தகங்கள் நூலகங்களிலும் அருங்காட்சியகங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.


200 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இப்புத்தகத்தின் ஒரு பிரதி $8,802,500 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது. இதுவரையில் இந்தச் சாதனை முறியடிக்கப்படவில்லை.


இவ்வாண்டு டிசம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்படவிருக்கும் நூல் மறைந்த ஹெஸ்கத் பிரபு அவர்களின் சேகரிப்பில் இருந்து வந்துள்ளது. இது கிட்டத்தட்ட $9.2 மில். வரையான விலையில் விற்பனைக்கு விடப்படவிருக்கிறது. இப்புத்தகத்தில் 500 பறவை இனங்களின் ஆயிரம் ஒவியங்கள் உள்ளன. இப்புத்தகத்தைத் தயாரிப்பதற்கு ஓவியர் ஓடபோன் அவர்களுக்கு 12 ஆண்டுகள் பிடித்தனவாம். அமெரிக்கா முழுவதும் பயணித்து பறவைகளைச் சுட்டுக் கொன்று, பின்னர் அவற்றை கம்பியில் கட்டி தொங்கி விட்டு அவற்றை வரைந்துள்ளார். அதன் பின்னர், பிரித்தானியாவுக்குச் சென்று அவற்றைப் பிரசுரித்து செல்வந்தர்களிடம் விற்பனை செய்தார்.


ஹெஸ்கெத் பிரபுவின் சேகரிப்பில் ஷேக்ஸ்பியரின் First Folio என்ற அரிதான நூலும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. "இந்நூல் ஆங்கில இலக்கியத்தின் ஒரு முக்கிய நூல்," என சோதிபைசு தெரிவித்தார். இப்புத்தகத்தின் 750 பிரதிகள் மட்டுமே பிரசுரிக்கப்பட்டதாகவும், தற்போது 219 மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்[தொகு]