அசாரேயுடன் பேச்சு நடத்தத் தயாரென பிரதமர் அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஆகத்து 21, 2011

லோக்பால் என்று சொல்லப்படுகின்ற ஊழல் ஒழிப்பு நடைமுறைக்கான சட்ட மசோதா வலுப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரி அண்ணா அசாரே உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இது குறித்துப் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.


பிரதமர் இது குறித்துச் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், "இந்த விடயத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பான விவாதத்துக்கும், பேச்சு நடத்தவும் அரசு தயாராக இருக்கிறது. இது குறித்து தேசிய அளவிலான கருத்தொற்றுமை தேவை. நாட்டின் அனைத்துப் பிரிவினரும் விரும்பும் வகையில் வலுவான லோக்பால் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஊழலை ஒழிக்கும் லோக்பாலுக்கு நாங்களும் ஆதரவாளர்கள்தான். அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் அரசு பெறும் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார்.


லோக்பால் மசோதைவை நிறைவேற்றும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடமாட்டேன், உயிரை விடவும் தயாராக இருக்கிறேன் என்று அண்ணா அசாரே உறுதிபடத் தெரிவித்துள்ளார்.


ஊழலுக்கு எதிராக நேற்று முன் தினத்தில் இருந்து அண்ணா ஹசாரே நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக இளைஞர்களிடையே அவருக்கு பேராதரவு பெருகி வருகிறது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]