அமெரிக்காவில் "வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு" போராட்டங்கள் நாடெங்கும் பரவியது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், அக்டோபர் 11, 2011

ஐக்கிய அமெரிக்காவில் "வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு" (Occupy Wall St) என்று அடையாளப்படுத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்கள் பல நகரங்களில் தொடர்கின்றன.


செப்டெம்பர் 17, 2011

செப்டெம்பர் 17 இல் நியூயார்க் நகரில் சுமார் 1000 பேருடன் தொடங்கிய இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் இன்று சுமார் 50 மேற்பட்ட நகரங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. கனடாவிலும், ஐசுலாந்திலும் இந்தப் போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் இவற்றில் கலந்து கொண்டுள்ளார்கள். பல்வேறு தொழிற் சங்கங்களும் அமைப்புக்களும் தற்போது இதில் இணைந்துள்ளன. இவர்களுடன் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றுள்ளனர்.


"ஒக்கியூப்பை வோல் ஸ்ட்ரீட்" பல தரப்பட்ட மக்களையும், அவர்களது பல தரப்பட்ட கோரிக்கைகளையும் உள்ளடக்கியது. எனினும், அடிப்படையில் பெரும்பான்மையானவர்கள் ஐக்கிய அமெரிக்காவில் வணிக நிறுவனங்கள் அல்லது காப்பிரேசங்களின் ஆதிக்கத்தை எதிர்த்தும், அங்கு அதிகரித்து வரும் ஏற்ற தாழ்வை எதிர்த்தும் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். ஐக்கிய அமெரிக்காவில் சிறிய பணக்கார வர்க்கம் அதீத செல்வாக்கை அரசுகள் மீது பிரயோகிப்பதாகவும், அதனால் தமது குரல்கள் யாருக்கும் கேட்கவில்லை என்றும், அதனாலேயே இத்தகைய போராட்டங்கள் அவசியம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.


பராக் ஒபாமா பதவிக்கு வந்ததில் இருந்து இடதுசாரி தீவிர செயற்பாட்டாளர்கள் "தேனீர் கட்சி எக்ஸ்பிரசு" (Tea Party Express) என்ற குடையின் கீழ் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தி வந்துள்ளனர். அரச செலவீனங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும், அரசின் பலம் குறைக்கப்பட வேண்டும், வரிகள் குறைக்கப்பட வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாக இருந்து வந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் வலதுசாரிக் கட்சியான குடியரசுக் கட்சியில் இவர்கள் தற்போது பெரும் சொல்வாக்குப் பெற்றுள்ளார்கள்.


பல அரசியல் ஆய்வாளர்கள் ஒக்கியூப்பை வோல் இசுரீட் எதிர்ப்புப் போராட்டங்கள் தேனீர் கட்சி வழிமுறைகளுடன் ஒத்து இருப்பதாகவும், ஆனால் கொள்கையில் நேர் எதிராக இருப்பதையும் சுட்டியுள்ளனர்.


இந்த எதிர்ப்புப் போராட்டங்களின் போது பல கைதுகள் இடம்பெற்றுள்ளன. அக்டோபர் 1 அன்று 700 வரை கைது செய்யப்பட்டதாக நியூயோர்க் டைம்சு செய்தி வெளியிட்டது.


மூலம்[தொகு]