இசுலாமுக்கு மதம் மாறிய பெண் இலங்கை அரசுக்கு எதிராகக் குற்றம் புரிந்ததாகக் கைது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மார்ச்சு 26, 2010

பௌத்தத்தில் இருந்து இசுலாமுக்கு மதம் மாறிய பெண் ஒருவர் இலங்கை அரசுக்கு எதிரானர் எவக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.


மத்திய கிழக்கு நாடான பாரேனைச் சேர்ந்த இந்தப் பெண் தாம் மதம் மாறியமை குறித்து இரண்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டிருந்தார்.


இந்த இரண்டு புத்தகங்களும் இலங்கையின் பெரும்பான்மைப் பௌத்தர்களின் மொழியான சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளன.


இலங்கையில் விடுமுறையைக் கழிக்கவென வந்திருந்த போதே இவர் கைது செய்யப்பட்டார்.


இவர் இலங்கை அரசுக்கு எதிராக பல நடவடிக்கைகளில் ஈடுபட்ட்டிருந்ததாகதாம் நம்புவதாக காவல்துறைப் பேச்சாளர் ஒருவர் பிபிசி செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்தார். எனினும் அவர் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை. இப்பெண்ணின் பெயர் சிங்களப் பெயராக இருந்தாலும், ஒரு முஸ்லிம் பெண் போலவே அவரது உடைகள் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.


பாரேனில் இருந்து வெளியாகும் கல்ஃப் செய்திகள் என்ற பத்திரிகை இவரது பெயர் சேரா மலனி பெரேரா என்றும், 1980களில் இருந்து பாரேனில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கிறது. 1999 ஆம் ஆண்டிலேயே இவர் இசுலாமிற்கு மதம் மாறினார் என்றும் அவரது பெற்றோரும் சகோதரிகளும் கூட மதம் மாறியுள்ளார்கள் என்றும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.


இலங்கையில் இருந்து தான் எழுதிய நூல்களை வெளிநாட்டிற்கு அனுப்ப முயற்சித்த போது அஞ்சல் அலுவலகத்திலிருந்த ஒரு பணியாளர் கொடுத்த தகவலிலன் அடிப்படையில் அவரைக் காவல்துரையினர் கைது செய்ததாக பாரேனில் உள்ள அப்பெண்ணின் சகோதரி தெரிவித்துள்ளார். அப்பணியாளர் அரசில் அங்கம் வகிக்கும் ஒரு பௌத்த தேசியவாதக் கட்சியொன்றின் உறுப்பினர் எனவும் கூறப்படுகிறது.


பாரேனில் இப்பெண்ணின் வதிவிட உரிமை மார்ச் 24 இல் முடிவடைவதால் இவர் பாரேன் திரும்ப முடியாமல் போகலாம் என அவரது உறவினர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.


முஸ்லிம்கள் இலங்கையின் மூன்றாவது பெரிய இனமாகும். ஆனாலும் பௌத்த மதத்தில் இருந்து இசுலாமிற்கு மதம் மாறுவது அங்கு ஓர் அபூர்வமான நிகழ்வு என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

மூலம்