இலங்கை அதிபர் ராஜபக்ச மீது அமெரிக்காவில் வழக்குத் தாக்கல்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சனவரி 30, 2011

சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் புரிந்ததாகக் குற்றம் சாட்டி 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நட்டைஇடு கோரி இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச மீது அமெரிக்காவில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின் போதும் மற்றும் வேறு இரண்டு சந்தர்ப்பங்களில் தமது உறவினர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்து அமெரிக்காவில் வாழும் மூன்று தமிழர்கள் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.


அமெரிக்காவின் புகழ்பெற்ற வழக்கறிஞரான புரூஸ் ஃபெய்ன் இலங்கை இராணுவத்தால் ரஜீகர் மனோகரன். பிரேமாஸ் ஆனந்தராஜா மற்றும் கலைசெல்வி லவனின் கணவர் ஆகியோர் கொல்லப்பட்டதற்காக அவர்களின் உறவினர் சார்பில் 1991 சட்டத்திற்கு அமைய அமெரிக்காவின் வாசிங்டன் மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். வெளிநாட்டு அதிகாரிகள் சட்டவிரோதக் கொலைகளில் சம்பந்தப்பட்டிருந்தால் அமெரிக்காவின் இச்சட்டத்தின் மூலம் அவர்களை விசாரணைக்குட்படுத்த முடியும் என ஃபெயின் தெரிவித்தார்.


"இலங்கையில் மறைந்து கொண்டு சனாதிபதி மகிந்த ராசபக்ச நீண்ட காலம் நீதியிடம் இருந்து தப்ப முடியாது," என அவர் தெரிவித்தார்.


இலங்கையில் மறைந்து கொண்டு சனாதிபதி ராசபக்ச நீண்ட காலம் நீதியிடம் இருந்து தப்ப முடியாது.

—வழக்கறிஞர் புருசு பெயின், ஐக்கிய அமெரிக்கா

சனாதிபதி மகிந்த ராஜபக்சேயிடம் இருந்து பதில் கிடைக்காது விட்டால், அவர் இல்லாமலேயே வழக்கை முன்கொண்டு செல்லத் தாம் தயாராக இருப்பதாக புரூஸ் பெயின் அறிவித்துள்ளார்.


2009 இறுதிக்கட்டப் போரில் குறைந்தது 7,000 பொது மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் கூறியுள்ளது. ஆனாலும், இறந்தவர்களின் எண்ணிக்கை 30,000 என பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவிக்கின்றன.


கடந்த வாரம் தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு ராஜபக்ச அமெரிக்கா சென்று திரும்பியிருந்தார். ராசபக்சவுக்கு எதிரான வழக்கைத் தொடுத்திருக்கும் இனவழிப்புக்கு எதிரான தமிழர்கள் என்ற அமெரிக்க அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ராசபக்சவை அமெரிக்கா எவ்வித விசாரணைகளும் இன்றி நாட்டுக்குள் அனுமதித்திருந்தமை குறித்து "ஆழந்த கவலையையும் கண்டனங்களையும்" தெரிவித்துள்ளது.


இந்த வழக்கு ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வர வேண்டும் என்பதற்காகவே செய்யப்பட்ட முயற்சி என சனாதிபதி ராஜபக்சேவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்தப்போவதில்லை என்று சனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.


மூலம்[தொகு]